பாஸ்போர்ட் வாங்க இனி பிறப்பு சான்றிதழ் தேவையில்லை… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கு இனி பிறப்புச் சான்றிதழ் கட்டாயமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக ஆதார், பான் அட்டைகள் ஆகியவற்றை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள கடவுச்சீட்டு எனப்படும் பாஸ்போர்ட் அவசியம் என்பதால் பலரும் இதற்காக விண்ணப்பித்து வருகின்றனர்.
இதனை பெறுவதற்கு பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் சமர்பிக்கப்படுவது கட்டாயமாகும். கடந்த 1980ம் ஆண்டின் பாஸ்போர்ட் சட்ட விதிமுறைப்படி, 1989ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதிக்கு முன்பு பிறந்தவர்கள் அனைவரும் பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்து வருகிறது.
தற்போது பிறந்த தேதிக்கான ஆதாரமாக, பிறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமில்லை என்றும், இதற்காக பள்ளிச் சான்றிதழ் அல்லது ஆதார், பான் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்தால் போதுமானது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லட்சக்கணக்கானோர் தொடர்ந்து பாஸ்போர்டுக்கு விண்ணப்பிப்பதால் அவர்கள் அதனை எளிதாக பெறுவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.