பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பல்வேறு நிலைப்பாடுகளை கடுமையாக எதிர்த்துவந்த பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், அவரது ரூபாய் நோட்டு அறிவிப்பை பெரிதும் வரவேற்றுள்ளார். இது ஒரு துணிச்சலான முடிவு என்றும் பாராட்டியுள்ளார்.

கருப்புப் பணத்தை ஒழிக்‍கும் நடவடிக்‍கையாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்ததற்கு நாட்டின் பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்‍கைக்‍கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

பிரதமரின் இந்த நடவடிக்‍கை, துணிச்சலான முடிவு எனக்‍ குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், உரிய மாற்று நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்படாததால் சாதாரண பொதுமக்‍கள் அதிகமாக பாதிக்‍கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள அனைத்துக்‍ கட்சியினரும் இவ்விவகாரத்தில் எதிர்மறையான தன்மைகளை மட்டுமே பார்க்‍கின்றனர் என்றும் ஆனால், தான் இதில் உள்ள நேர்மறையான தன்மைகளையும் கவனிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பீகாரில், லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து ஆட்சியை மீண்டும் பிடித்துள்ள நிதிஷ்குமார், அம்மாநிலத்தில் எதிர்க்‍கட்சியாகவும், மத்தியில் ஆளும் கட்சியாகவும் உள்ள பாரதிய ஜனதா தலைமையிலான அரசின் நிலைப்பாடுகளை கடுமையாக எதிர்த்து வந்தார். இந்நிலையில், பிரதமரின் ரூபாய் நோட்டு அறிவிப்பை வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்‍கது.