3-வது முறையாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் - கேபினேட்டில் இடம்பிடித்த நிர்மலா சீதாராமன்!
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை 3-வது முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. 9 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 4 இணையமைச்சர்களுக்கு கேபினட் அந்தஸ்து உயர்த்தப்பட்டது. இவர்களும் இன்று பதவியேற்று கொண்டனர்.
குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விழாவில், பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான், மின்சாரத்துறை இணையமைச்சராக இருந்த பியூஸ்கோயல், தமிழகத்தை சேர்ந்த வர்த்தகத்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன், பார்லிமென்ட் விவகாரத்துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிவபிரதாப் சுக்லா, சத்யபால்சிங், பீகாரை சேர்ந்த அஸ்வினி குமார் செளபே, ஆர்.கே. சிங், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வீரேந்திரகுமார் , கர்நாடகாவை சேர்ந்த அனந்தகுமார் ஹெக்டே, ராஜஸ்தானை சேர்ந்த கஜேந்திரசிங் ஷெகாவத், அல்போன்ஸ் கண்ணந்தனம், ஹர்தீப் சிங்பூரி ஆகிய 9 பேர் புதிதாக அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
இவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க., தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.