nirav modi letter to punjab national bank

11,400 கோடி ரூபாய் வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

வைர வியாபாரியான நீரவ் மோடி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார். வங்கி ஊழியர்களின் உதவியுடன் நீரவ் மோடி இந்த மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக டெல்லி, பெங்களூரு உட்பட நாட்டின் பல பகுதிகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர், சுமார் 5700 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், நீரவ் மோடி மோசடியில் ஈடுபட்ட பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர். வெளிநாட்டில் பதுங்கியுள்ள நீரவ் மோடியை சர்வதேச போலீஸ் உதவியுடன் இந்தியாவிற்கு கொண்டுவர சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், வங்கிக்கு நீரவ் மோடி எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், எனது நிறுவனங்கள் வங்கிக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.5,000 கோடிக்கும் குறைவுதான். இந்த கடன் விவகாரத்தை வங்கி அவசரப்பட்டு வெளிப்படுத்தி புகார் அளித்ததன் மூலம் எனது நிறுவனத்தின் பெயர் கெட்டுவிட்டது, எனது தொழிலிலும் அழிந்துவிட்டது. 

என்னிடம் இருந்து கடனைத் முறையாகத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து வழிகளையும் வங்கியே அடைத்துவிட்டது. வங்கி சார்பில் அவசரப்பட்டு அளிக்கப்பட்ட புகார்களாலும், இந்த விவகாரத்தில் ஊடகங்கள் வெளியிட்ட பரபரப்பான செய்திகளால் பல்வேறு விசாரணை அமைப்புகள் உடனடியாக எனது நிறுவனங்களில் சோதனை, சொத்து பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டன. இதனால் எனது வர்த்தக நிறுவனங்கள் முடங்கிவிட்டன.

எனக்கு கடன் உத்தரவாதம் அளித்ததற்காக பல ஆண்டுகளாக கோடிக்கணக்கான பணத்தை வங்கிக்கு நான் கட்டணமாக செலுத்தியுள்ளேன். உள்நாட்டில் உள்ள எனது தொழில் நிறுவனங்கள் மற்றும் சொத்துகளின் மதிப்பு சுமார் ரூ.6,500 கோடியாகும். அவற்றை விற்பனை செய்தால் கூட வங்கிக்கு நான் செலுத்து வேண்டிய கடனை முடித்துவிட முடியும். ஆனால், இப்போது அதற்கான காலம் கடந்துவிட்டது.

எனது மனைவி, மாமா மற்றும் சகோதரருக்கு நான் நடத்தி வரும் தொழிலில் எந்தத் தொடர்பும் இல்லை. எனக்கும், வங்கிகளுக்கும் இடையில் உள்ள நிதி விவகாரங்கள் அவர்களுக்குத் தெரியாது. ஆனால், அவர்களது பெயரிலும் தவறாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனது நிறுவனத்தில் பணியாற்றும் 2,200 பேருக்கு எனது நடப்புப் கணக்கில் உள்ள பணத்தில் இருந்து ஊதியம் வழங்க வங்கி அனுமதிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் நீரவ் மோடி கூறியுள்ளார்.