2020 பேட்ச் மருத்துவ மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வு பொருந்தும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டேவியா தெரிவித்துள்ளார்

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள எய்ம்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அடிக்கல் நாட்டிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டேவியா, மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, அவரிடம் நெக்ஸ்ட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “2019 பேட்ச் எம்பிபிஸ் மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வை எழுத வேண்டியதில்லை. 2020 பேட்ச் மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வை எழுத வேண்டி இருக்கும்.” என்றார்.

மேலும், மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் எந்த முடிவையும் மத்திய மற்றும் தேசிய மருத்துவ ஆணையம் எடுக்காது எனவும் மத்திய அமைச்சர் மன்சுக் மண்டேவியா உறுதிபட தெரிவித்தார். 

தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி, நெக்ஸ்ட் தேர்வு என்பது இறுதியாண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான தகுதித் தேர்வாகவும், முதுகலை மருத்துவப் படிப்புகளில் தகுதி அடிப்படையிலான சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் இருக்கும். அதேபோல், வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று இந்தியாவில் பதிவு செய்து பணியாற்றவும் எழுதப்படும் Foreign Medical Graduates Examination என்ற தேர்வுக்கு பதிலாகவும் இந்த நெக்ஸ்ட் தேர்வு இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டேவியா “மருத்துவம் முடித்த மாணவர்களுக்கு இறுதி தேர்வாக நெக்ஸ்ட் இருக்காது. அவர்களுக்கு பட்டம் வழங்கப்படும். ஆனால் பட்டம் பெற்ற பிறகு, மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய நெக்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நெக்ஸ்ட் தேர்வானது நீட் தேர்வுக்கு சமமான ஒன்று.” என்றும் அவர் தெரிவித்தார்.

இதுவரை, எம்பிபிஎஸ் மாணவர்கள் நான்கரை வருடக் கல்லூரிப் படிப்பை முடிக்க வேண்டும். அந்தந்த மருத்துவப் பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகள் நடத்தும் பொதுத் தேர்வுகளில் வெற்றிபெற்றதும், ஓர் ஆண்டு காலம் பயிற்சி மருத்துவராகப் பணிபுரிய வேண்டும். பிறகு, இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவுசெய்து இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் மருத்துவராகப் பணிபுரியலாம் எனும் நடைமுறை இருந்தது.

ராகுல் காந்தி மனு தள்ளுபடி: அடுத்து என்ன?

அதேபோல, முதுநிலை மருத்துவப் படிப்புக்குத் தனியாக ‘நீட்-பிஜி’ தேர்வை எழுத வேண்டும். அந்த மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். மேலும், வெளிநாட்டில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்கள் ‘எஃப்எம்ஜிஇ’ தேர்வை எழுத வேண்டும். அதில் வெற்றி பெற்றால்தான் இந்தியாவில் பயிற்சி மருத்துவராகவும், அதன் பிறகு பதிவுசெய்யப்பட்ட மருத்துவராகவும் பணியாற்ற முடியும் என்ற நிலை இருந்தது.

தற்போது இது அனைத்திற்கும் புதியதாக நெக்ஸ்ட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்து பட்டம் பெற்ற மாணவர்கள், நெக்ஸ்ட் தேர்வை எழுதினால் மட்டுமே மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து மருத்துவராக முடியும், முதுகலை மருத்துவப் படிப்புகளில் தகுதி அடிப்படையிலான சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் நெக்ஸ்ட் உள்ளது. மேலும், வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்களும் இந்த தேர்வை எழுதினால்தான் இந்தியாவில் மருத்துவராக பணிபுரிய முடியும்.

இந்த நெக்ஸ்ட் தேர்வுக்கு பல்வேறு மாநில அரசுகள், மருத்துவ சங்கங்கள், மருத்துவ மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசை பொறுத்தவரை எம்பிபிஎஸ் படித்து மருத்துவராவதற்கும், முதுநிலை படிப்பில் சேர்வதற்கும் நெக்ஸ்ட் தேர்வு கட்டாயம் என்கிறது. ஆனால், அனைவருமே முதுநிலை படிப்பு படிக்க செல்வதில்லை. ஏராளமானோர் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றதும் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து மருத்துவர்களாக பணியாற்ற சென்று விடுவர். ஆனால், இந்த நெக்ஸ்ட் தேர்வு அதிலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.