விரைவில் அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் - அதிரடியாக வருகிறது புதிய சட்டம்
அனைத்து துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் விரைவில் நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதாவது ரூ.18 ஆயிரத்துக்கு அதிகமாக ஊதியம் பெற்று இருந்தாலும் கூட அவர்களுக்கும் சேர்த்து இந்த அறிவிப்பு பொருந்தும். இதற்கு முன் அரசின் பட்டியலிட்ட தொழில்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த துறைகளுக்கும் நிர்ணயிக்கப்படுகிறது.
இதன்மூலம், தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியத்தை கொடுத்து பணிக்கு நிறுவனங்கள் அமர்த்த முடியாது.
தொழிலாளர்களுக்கு சாதகமான இந்த திட்டம், இம்மாத இறுதிக்குள் மத்திய அமைச்சரவையின் அனுமதிபெற்று, வரும் மழைகாலக்கூட்டத்தொடரில் அவையில் தாக்கலாகும் எனத் தெரிகிறது.
இது குறித்து அரசு வட்டாரங்கள் கூறுகையில், “ தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் குறித்த விதிமுறைகளுக்கு ஏற்கனவே நிதி அமைச்சர்ஜெட்லி தலைமையிலான குழு ஒப்புதல் அளித்துவிட்டது.
சட்டத்துறை அமைச்சகத்திடமும் அனுப்பப்பட்டுவிட்டது. விரைவில் மத்திய அமைச்சரவையில் தாக்கலாகும். இந்த மசோதா அடுத்த மாதம் தொடங்கும் மழைக்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவும் தொழிலாளர் துறை அமைச்சகம் ஆர்வமாக இருக்கிறது’’ எனக் கூறப்பட்டது.
இதன் மூலம் நாட்டில் உள்ள அனைத்து துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும். இதையே மாநில அரசுகளும் பின்பற்றும். ஒருவேளை, மத்திய அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியத்துக்கு அதிகமாகக் கூட மாநில அரசுகள் ஊதியத்தை நிர்ணயம் செய்ய அதிகாரம் அளிக்கப்படும்.
இந்த குறைந்தபட்ச ஊதியம் என்பது அனைத்து துறைகளிலும் பணியாற்றும், அனைத்து வகுப்பு ஊழியர்களுக்கும் பொருந்தும். இப்போது, மத்திய அரசு பட்டியலிடப்பட்ட தொழில்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஊதிய அளவு பின்பற்றப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
அதிலும், குறைந்தபட்ச ஊதியம் என்பது ரூ.18 ஆயிரம் வரை ஊதியம் பெறுபவர்களுக்கே பொருந்தும் என்று இப்போது நடைமுறை இருக்கிறது. இனிவரும் சட்டம் மூலம், அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும், எந்த அளவு ஊதியம் பெற்றாலும் பொருந்துமாறு அமைக்கப்படும்.