உங்கள் தந்தை ராஜினாமா செய்தாரா? ராகுல் காந்தியை விளாசும் நெட்டிசன்கள்!
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ராகுல்காந்திய எழுப்பிய கேள்விக்கு நெட்டிசன்கள் எதிர்கேள்வி எழுப்பி வருகின்றனர்
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 275 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒடிசா, பாலசோரில் விபத்து நடைபெற்ற இடத்தில் நேரில் ஆய்வு செய்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், 3 ரயில்கள் விபத்து தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட குழு அமைத்துள்ளதாகவும், ரயில் விபத்து குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வே வரலாற்றில் மிகவும் மோசமான விபத்தில் ஒன்றாக பார்க்கப்படும் ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. விபத்து குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “ஒடிசா ரயில் விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், இதுவரை இதற்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. இத்தகைய வேதனையான விபத்துக்குப் பொறுப்பேற்காமல் மோடி அரசு எங்கும் ஓடிவிட முடியாது. உடனடியாக ரயில்வே அமைச்சரை ராஜினாமா செய்யப் பிரதமர் வலியுறுத்த வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய வம்சாவளியினரை சந்தித்த அவர், அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நடந்த ரயில் விபத்து எனக்கு நினைவிருக்கிறது. ஆங்கிலேயர்களின் தவறால் ரயில்கள் விபத்துக்கு உள்ளானது என்று காங்கிரஸ் சொல்லவில்லை. அவற்றுக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். சாக்குபோக்கு கூறவில்லை. இதுவே அவர்கள் (பாஜக) பழியை கடந்து செல்வார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்பார்கள்.” என்று பேசினார்.
இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ராகுல்காந்திய எழுப்பிய கேள்விக்கு நெட்டிசன்கள் எதிர்கேள்வி எழுப்பி வருகின்றனர். “போபால் விஷவாயு கசிவு ஏற்பட்ட போது முதல் சில நாட்களில் 3,000 நபர்கள் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை பின்பு அதிகமானது. அப்போது உங்கள் தந்தை அதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தாரா? என் நாட்டையோ, அரசையோ வெளிநாட்டில் விமர்சிக்க உங்களுக்கு உரிமை இல்லை.” என நெட்டிசன் ஒருவர் ராகுல் காந்தியை சாடியுள்ளார்.
அதேபோல், “ராகுல் தாயாரின் (சோனியா காந்தி) ரயில்வே அமைச்சர், ஒரு குற்றவாளி, ஊழல்கள் செய்தார். வேலைகளை விற்கப்பட்டன. நிலங்களை அவரது மனைவி/மகன் பெயரில் பதிவு செய்தார்.” என மற்றொரு நெட்டிசன் விமர்சித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்காவில் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, பாஜகவை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பாஜகவினர் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். வெளிநாட்டு மண்ணில் இந்தியா குறித்து ராகுல் காந்தி பேசுவதாகவும் அவர்கள் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.