செப்.11ல் முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு... மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு...!
இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு அறிவிப்பை தொடர்ந்து, தற்போது முதுகலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணி முதல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பணிகளையும் மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை 198 நகரங்களில் நீட் தேர்வு நடத்தப்படும் என்றும் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே 155யில் நகரங்களில் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், கொரோனா பரவலையும், மாணவர்கள் நலனையும் கருத்தில் கொண்டு தேர்வு எழுதும் நகரங்களின் எண்ணிக்கை இம்முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் 3 ஆயிரத்து 862 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார்.
தேர்வு எழுத வரும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், நீட் தேர்வுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு அறிவிப்பை தொடர்ந்து, தற்போது முதுகலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். செப்டம் 11ம் தேதி நாடு முழுவதும் கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி முதுகலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ள அவர், தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.