எலான் மஸ்க்குக்கு அழைப்பு விடுத்த நவ்ஜோத்சிங் சித்து... காரணம் தெரிஞ்சா ஷாக் ஆவிங்க!!
பஞ்சாப்பை நவீனமயமாக்க எலான் மஸ்க்கை அழைப்பேன் என்று நவ்ஜோத்சிங் சித்து என்று தெரிவித்துள்ளார்.
பஞ்சாப்பை நவீனமயமாக்க எலான் மஸ்க்கை அழைப்பேன் என்று நவ்ஜோத்சிங் சித்து என்று தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பஞ்சாப் மாநிலத்திற்கு வரும் பிப். 14ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ள நிலையில், அதைத் தக்க வைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், பஞ்சாபில் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம் தீர்ந்தபாடில்லை. கடந்த 4 ஆண்டுகளாகப் பஞ்சாபில் மூத்த தலைவர்களில் ஒருவரான அமரிந்தர் சிங் முதல்வராக இருந்தார். அமரிந்தர் சிங் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து இடையே மோதல் உச்சமடையவே, அமரிந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சரண்ஜித் சிங் சன்னி கொண்டு வரப்பட்டார். பஞ்சாபில் சுமார் 30% தலித்துகள் உள்ளதால் அதே சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதை அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் தற்போது சரண்ஜித்சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
பஞ்சாப் மாநிலத்திற்கு வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப்பில் ஆட்சியை தக்கவைக்க காங்கிரசும், ஆட்சியை பிடிக்க பா.ஜ,.க.வும், இவர்களுடன ஆம் ஆத்மியும் போட்டியில் உள்ளன. இந்த நிலையில், 86 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் நேற்று அறிவித்தது. பஞ்சாப் காங்கிரஸ் தலைவரான நவ்ஜோத்சிங் சித்து அமிர்தரசஸ் கிழக்கில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், பஞ்சாப்பை நவீனமயமாக்க எலான் மஸ்க்கை அழைப்பேன் என்று நவ்ஜோத்சிங் சித்து தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், பஞ்சாபின் லூதியானாவை மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி தொழில்துறைக்கான மையமாக உருவாக்கவும், முதலீட்டிற்கான ஒற்றைச் சாளர அனுமதியுடன் எலான்மஸ்க்கை நான் அழைக்கிறேன்.
இது பஞ்சாபிற்கு புதிய தொழில் நுட்பத்தை கொண்டு வரும். இது பசுமையான வேலைகளை உருவாக்குதல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான நடைப்பாதையை அமைக்கும் என்று அவர் பதிவிட்டுள்ளார். முன்னதாக, பிரணாய் பதோல் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் எலான் மஸ்க்கிடம், இந்தியாவில் டெஸ்லா காரை லாஞ்ச் செய்வது குறித்து ஏதேனும் தகவல் உண்டா? என்று கேட்டு பதிவிட்டார். அவரது கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க், அரசுடன் இணைந்து பணியாற்ற பல சவால்களை இன்னும் எதிர்கொண்டுள்ளோம் என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவிற்காகவே நவ்ஜோத்சிங் சித்து இந்த பதிவை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.