இளைஞர்களை வேலையைவிட்டு திடீரென நீக்குவதில் நியாயமில்லை, குடும்பம் நம்பி இருக்கு.. நிறுவனங்கள் மீது நாராயண மூர்த்தி ‘பாய்ச்சல்’
தகவல் தொழில்நுட்பத்துறையில் சமீப காலமாக அதிகரித்து வரும் இளைஞர்களை வீட்டுக்கு அனுப்புவதைத்(ஜாப் கட்) தடுக்க நிறுவனத்தில் உள்ள மூத்த, உயர் அதிகாரிகளின் சம்பளத்தை குறைத்துவிட்டு, இளைஞர்களின் வேலையை பாதுகாக்க வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவனத்தின் இயக்குநர் நாராயண மூர்த்தி புதிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
சமீபகாலமாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இளைஞர்களை வேலையைவிட்டு திடீரென நீக்கும் முறை அதிகரித்து வருகிறது. திறமை இல்லாத பணியாட்களையே நாங்கள் அனுப்புகிறோம் இது ஆண்டுதோறும் நடக்கும் முறைதான் என ஐ.டி. நிறுவனங்கள் காரணம் கூறுகின்றன.
இந்த ஆண்டு மட்டும் இன்போசிஸ், விப்ரோ, டெக் மகிந்திரா, எச்.சி.எல்., காக்னிசன்ட், டி.எஸ்.சி., பிரான்சின் கேம் ஜெமினி ஆகிய நிறுவனங்கள் 56 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளன. இதனால், ஐ.டி. ஊழியர்கள் முதல் முறையாக தொழிற்சங்கம் அமைத்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து இன்போசிஸ் நிறுவனத்தின் இயக்குநர் நாராயணமூர்த்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது-
என்னைப் பொருத்தவரைக்கும், தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் இளைஞர்களின் வேலையை பாதுகாக்க வேண்டும். அதற்காக அந்தந்த நிறுவனங்களில் உள்ள மூத்த, உயர் அதிகாரிகள் தங்களின் ஊதியத்தை சிறிதளவு தியாகம்செய்தால், அதாவது ஊதியக் குறைப்புக்கு ஒத்துக்கொண்டால், நிச்சயமாக இளைஞர்களின் வேலையை பாதுகாக்கலாம்.
இன்போசிஸ் நிறுவனத்தையே நான் உதாரணமாக கூறுகிறேன். கடந்த 2001ம் ஆண்டு சர்வதேச சந்தைச் சூழல் மிகவும் கடினமாக இருந்தது. அப்போது நிறுவனத்தின் அனைத்து மூத்த உயர் அதிகாரிகளும் ஒன்றாக அமர்ந்து ஆலோசித்தோம். அப்போது முடிவு செய்தோம், எங்களின் ஊதியத்தை சிறிதளவு தியாகம் செய்தால் இளைஞர்களின் வேலையை பாதுகாக்கலாம் எனக் கருதி நாங்கள் தியாகம் செய்தோம்.
இப்போது நிலவும் கடினமான சந்தை சூழல் போன்று, கடந்த 2001, 2008ம் ஆண்டு வந்துள்ளது. புதிதாக ஒன்றும் வந்துவிடவில்லை. பெரிதாக நாம் ஏதும் பயப்படத் தேவையில்லை.கடந்த காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.
ஐ.டி. நிறுவனங்கள் வௌிப்படையாக ஆட்குறைப்பை பற்றி பேச விருப்பமில்லை. தங்களின் ஆண்டு மதிப்பீட்டின்படி எத்தனை நிறுவனங்கள் முறைப்படி பணியாற்றும் இளைஞர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து அனுப்பப்பட்டு இருக்கிறது.
ஐ.டி. நிறுவனத் தலைவர்கள் புதிய வாய்ப்புகளை , பல புதிய வழிகளில் கண்டுபிடிக்க வேண்டும். இளைஞர்களை புதிதாக பணியமர்த்த வேண்டும். அவர்களுக்கு அடுத்த ஓர் ஆண்டில் பணி தருவதாக உறுதியளிக்க வேண்டும். அவர்களால் முடியாவிட்டால் மற்றொரு பணியை வழங்க வேண்டும்.
அதை விடுத்து, வேலையில் இருக்கும் இளைஞர்களை எளிதாக வீட்டுக்குச் செல்லுங்கள் என்று கூறுவது நியாயமில்லாதது. பல குடும்பங்கள் அவர்களைச் சார்ந்து உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.