`முத்தலாக்' முறையை ஒழித்து முஸ்லிம் பெண்களுக்கு நீதி வழங்க வேண்டும் - பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் மோடி பேச்சு
முத்தலாக் விவாகரத்து முறையை நீக்கி முஸ்லிம் பெண்களுக்கும் நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
புவனேஸ்வரத்தில் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது-
முத்தலாக் விவாகரத்து முறையால் முஸ்லிம் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். நாட்டில் ஒரு சமூக தீங்கு நிலவுமானால் சமூகம் அதற்கு எதிராக கிளர்ந்து எழுந்து போராடவேண்டும்.
இந்த சமூக எழுச்சியின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்யவேண்டும். அதே வேளையில், முத்தலாக் பிரச்சனையில் முஸ்லிம் சமுதாயத்திற்குள் மோதலை ஏற்படுத்தக்கூடாது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி செய்தியாளர்களிடம் விளக்கினார்.
அனைவருக்கும் சமூக நீதி கிடைக்கவேண்டும். அது முஸ்லிம் பெண்களுக்கும் கிடைக்கவேண்டும், அவர்களுக்கு அநீதி வழங்கப்படக்கூடாது. யாரும் எவராலும் சுரண்டப்படக்கூடாது என பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டதாக நிதின் கட்காரி கூறினார்.
முஸ்லிம் பெண்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படவேண்டும் என்ற உணர்வில் பிரதமர் பேசினார். முத்தலாக் விவாகரத்து முறையை நீக்க அனைவரும் ஒன்றுசேர்ந்து பாடுபடவேண்டும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.