மும்பை நாக்பூர் ஓல்டு ஹைவேயில் ஏற்பட்ட பஸ் - டிரக் மோதலில் 7 பேர் உயிரிழந்தனர்.
மும்பை நாக்பூர் ஓல்டு ஹைவேயில் இன்று காலை ஏழு மணியளவில் ஏற்பட்ட பஸ் - டிரக் மோதலில் ஏழு பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிந்த்கேடராஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த சிறிது நேரத்தில் எமர்ஜென்சி சேவை துரிதமாக செயல்பட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தது.
மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் புனேயிலிருந்து மெஹேகர் நோக்கிச் சென்ற பேருந்து எதிர்திசையில் இருந்து அதிவேகமாக வந்த டிரக் மீது மோதியதில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது.
விபத்துக்குள்ளான டிரக் லாஜிஸ்டிக் நிறுவனதைச் சேர்ந்தது என்பது தெரிய வந்துள்ளது. மீட்பு படையினருடன் உள்ளூர் மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில், மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில், ஒரு எஸ்யூவி மீது வேகமாக வந்த டிரக் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். ஏழு பேர் காயமடைந்தனர். மும்பையில் இருந்து 650 கிமீ தொலைவில் அமைந்துள்ள அமராவதியில் உள்ள கல்லார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தர்யாபூர்-அஞ்சங்கான் சாலையில் திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பலியானவர்களில் பெரும்பாலானோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் குடும்ப விழாவில் கலந்து கொண்டு தர்யாபூருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் தர்யாபூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
