#BREAKING கொரோனா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து... 10 பேர் உடல் கருகி உயிரிழந்த பரிதாபம்!
மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று தீவிரமடைந்தைப் போலவே நடப்பு ஆண்டிலும் கொரோனா தொற்றின் வேகம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஜனவரி மாதம் முதலே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும், அதை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு தொற்று தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவிலேயே கோவிட் தொற்றின் தாக்கம் அதிகமுள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் உள்ள ட்ரீம்ஸ் வளாகத்தின் 3வது தளத்தில் கொரோனா நோயாளிகளுக்கான சன் ரைஸ் என்ற சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில் 73 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.
சரியாக நள்ளிரவு 12.30 மணி அளவில் சன்ரைஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்திலேயே மளமளவென பரவிய தீயால் அப்பகுதியில் புகைமூட்டம் உருவானது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து அந்த தீயணைப்புத்துறையினர் கடுமையாக போராடி தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் கொரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வந்த 10 நோயாளிகள் உயிரிழந்ததாக மும்பை தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.