பெற்ற குழந்தையை கொலை செய்து நாடகமாடிய தாய்..! முகத்திரையை கிழித்த போலீஸ்.. அதிர்ச்சி சம்பவம்..!
மூன்று மாத பெண் குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அருகே காஜியாபாத் பகுதியில் வசித்துவரும் ஆர்த்தி என்ற பெண்ணுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன், பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், நேற்று குழந்தையைக் காணவில்லை என கதறிய ஆர்த்தி, காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.
ஆர்த்தியின் புகாரை அடுத்து, அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். வாஷிங் மெஷினில் குழந்தை பிணமாகக் கிடந்ததைக் கண்டு போலீசார் அதிர்ந்தனர். இதையடுத்து ஆர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, மூன்று மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை இல்லையென்ற விரக்தியில் இருந்தேன். விரக்தியின் உச்சத்தில், நேற்று தலையணையை வைத்து குழந்தையின் மூச்சை அடக்கி, கொலை செய்து, வாஷிங் மெஷினில் போட்டேன். குழந்தையைக் காணவில்லை என நாடகமாடினேன் என ஆர்த்தி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து ஆர்த்தியின் குடும்பத்தினரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் யாரும் ஆண் குழந்தைதான் வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை என்பது தெரியவந்தது. ஆனாலும் பெற்ற குழந்தையை பெண் குழந்தை என்பதற்காக கொலை செய்த ஆர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
பெண் குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.