பழிவாங்குவதில் மனிதனை மிஞ்சிய குரங்குகள்.. 250 நாய்க்குட்டிகளை கொன்ற கொடூரம்
மஹாராஷ்டிராவின் ஒரு கிராமத்தில் தங்கள் குட்டியை கொன்றதற்கு பழிதீர்க்கும் வகையில், இதுவரைக்கும் 250க்கும் மேலான நாய்களை குரங்குகள் கொலை செய்துள்ளதாக கூறும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிராவின் பீட் மாவட்டம் மஜல்கான் கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அளிப்பதாக உள்ளது. இங்கு வழக்கத்திற்கும் அதிகமாக குரங்குகளும் , நாய்களும் வசிக்கின்றன. இதனால் அடிக்கடி குரங்குகளுக்கும் நாய்களுக்கும் சண்டை நடந்து வந்துள்ளது. இந்நிலையில் ஒரு குரங்கு குட்டியை கடந்த மாதம் சில நாய்கள் சேர்ந்து கொன்றதாக தெரிகிறது. அதற்கு பழிவாங்க குரங்குகள் இதுவரை 250க்கும் மேலான நாய்களை கொன்றுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
குரங்குகள் நாய்க்குட்டிகளை எடுத்துச் செல்வதை இங்கு தினமும் காண முடிகிறதாகவும் நாய்க்குட்டிகளை மரங்கள், கட்டிடங்கள் போன்ற உயரமான இடங்களுக்கு கொண்டு சென்று கீழே வீசி கொல்லுகின்றதாகவும் கூறுகின்றனர். கிராமத்தில் இப்போது ஒரு நாய்க்குட்டி கூட இல்லை என்றும் குரங்குகளின் இந்த அதிர்ச்சிகரமான செயலால் நாங்கள் அச்சமடைந்துள்ளோம் என்றும் கூறும் மக்கள் குரங்குகள் வெளியூர்களில் இருந்து வந்து நாய்க்குட்டிகளைத் தேடிக் கொல்வதும் இங்கு நடக்கின்றது என்கின்றனர். இதனிடையே பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மீதும் குரங்குகள் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்துகின்றன என்றும் கூறுகின்றனர்.
குரங்களிடம் இருந்து தங்களை பாதுக்காக்கும் படி வனத்துறையினரிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டுகின்றனர். இங்கு இருக்கும் ஒவ்வொரு நொடியும் அதிக அச்சத்தில் இருப்பதாகவும் பிரச்னைக்கு தீர்வு காண, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.