புதிய நாடாளுமன்றத்துக்கான செலவு கொஞ்சம்தான்! அமெரிக்காவுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கருத்து
புதிய நாடாளுமன்றம் கட்டிடம் கட்டுவதற்காகச் செலவிடப்பட்டுள்ள தொகை வியட்நாம் நாட்டில் அமெரிக்கா கட்டிவரும் தூதரகக் கட்டிடத்துக்கு ஆகும் செலவைவிட குறைவுதான் என்று சொல்கிறார்கள்.
எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு மத்தியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டதாக உருவாகியுள்ளது.
புதிய நாடாளுமன்றம் கட்ட 2020ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது புதிய நாடாளுமன்றத்துக்கு ரூ.862 கோடி செலவாகும் என்று கூறப்பட்டது. பின், 2021ஆம் ஆண்டு மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய அரசு ரூ.921 கோடி செலவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்படும் எனக் கூறியது. கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியான அறிக்கை ஒன்றில் சுமார் 1,250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பபடுதவாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மிகப்பெரிய தொகையைச் செலவிட்டு புதிய நாடாளுமன்ற கட்டிடம் தொடங்கப்பட்டதை எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. திறப்பு விழாவிலும் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், வியட்நாம் நாட்டின் தலைநகரான ஹனோயில் அமெரிக்கா கட்டிவரும் தூதரகக் கட்டிடத்துடன் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஒப்பிட்டு நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
ஹனோய் அமெரிக்க தூதரகத்துக்கு அமெரிக்க அரசு 1.2 பில்லியன் டாலர் தொகையைச் செலவிடுகிறது. இந்தியா கட்டியுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு 1.25 மில்லியன் டாலருக்கும் குறைவான தொகையே செலவாகியுள்ளது. இது ஒன்றும் அதிகம் அல்ல என்று ட்விட்டரில் பாலாஜி என்பவர் பதிவிட்டுள்ளார். இதே வாதத்தை இன்னும் பல நெட்டிசன்களும் முன்வைத்துள்ளனர்.
— Balaji (@balajis) May 28, 2023
பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவையில் 550 உறுப்பினர்களும், ராஜ்யசபாவில் 250 உறுப்பினர்களும் இடம் பெற்றிருந்தனர். ஆனால், புதிய நாடாளுமன்ற கட்டிடம் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் மக்களவையில் 888 உறுப்பினர்களுக்கும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களுக்கும் இருக்கை வசதி உள்ளது. திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடியும், விரைவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நான்கு மாடிக் கட்டிடத்தில் உணவகம், வாகன நிறுத்துமிடம், பெரிய அரசியலமைப்பு மண்டபம் எனப் பல பகுதிகளைக் கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் உள்ள ஊழியர்கள் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) மூலம் வடிவமைக்கப்பட்ட புதிய சீருடையை அணிந்து பணியாற்றுவார்கள்.
புதிய கட்டமைப்பில் மூன்று வாசல்கள் உள்ளன. அவை கியான் துவார், சக்தி துவார் மற்றும் கர்மா துவார் என்று அழைக்கப்பட்டுகின்றன. மேலும் எம்.பி.க்கள், விஐபிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு தனித்தனி வாயிலகள் உள்ளன.