பாஜக முன்னாள் அமைச்சர் தலைமறைவு... 3 மாநிலங்களில் தீவிர தேடும் வேட்டை!
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் சுரங்கத் தொழிலதிபரும், முன்னாள் பாஜக அமைச்சருமான ஜனார்த்தன ரெட்டியின் வீட்டில், கர்நாடக மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் சுரங்கத் தொழிலதிபரும், முன்னாள் பாஜக அமைச்சருமான ஜனார்த்தன ரெட்டியின் வீட்டில், கர்நாடக மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஜனார்த்தன ரெட்டியை பிடிக்க தனிப்படைகள் அமைத்து 3 மாநிலங்களில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த ஜனார்த்தன ரெட்டி ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இரும்புத்தாது சுரங்கங்களை நடத்தி வருகிறார். அம்பிதந்த் மார்க்கெட்டிங் என்னும் நிறுவனம் முதலீட்டாளர்களின் பலகோடி ரூபாய் பணத்தை ஏமாற்றி விட்டது. இதையடுத்து, அமலாக்கத்துறையின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அம்பிதந்த் நிறுவனர் சையது அகமது பரீத், ஜனார்த்தன ரெட்டி மூலம் ரூ.20 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதற்காக ரூ.2 கோடி, 57 கிலோ தங்கக் கட்டிகள் ஆகியவற்றை ஜனார்த்தன ரெட்டியிடம் வழங்கியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், இதுபற்றி அறிந்த பெங்களூர் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மஞ்சுநாத் சவுத்ரி தலைமையில் போலீசார், பெல்லாரியில் உள்ள ஜனார்த்தன ரெட்டியின் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் அவருக்கு சொந்தமான நிறுவனங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. ஆனால் ஜனார்த்தன ரெட்டி தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை 3 மாநிலங்களில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.