Mohammad Hamid Ansari said about ruling party
மாநிலங்கள் அவையில் சுற்றுச்சூழல் துறை தொடர்பான கேள்வி நேரத்தில் அமைச்சர் ஆனந்த்தவே வராததால், மத்திய அரசுக்கு மிகவும் அவமானமாக, தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டது.
இது குறித்து வேதனை தெரிவித்த அவைத்தலைவர் ஹமீது அன்சாரி இதுபோன்ற அசாதாரண சூழலை பல ஆண்டுகளாக நான் பார்த்தது இல்லை என்று தெரிவித்தார்.
கேள்வி நேரம்
மாநிலங்களவை நேற்று கேள்வி நேரத்தின் போது, சுற்றுச்சூழல் அமைச்சகம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மகேந்திர சிங் மஹரா கேள்வி எழுப்பினார். டில்லி, என்.சி.ஆர். பகுதியில் காற்று, ஒலி மாசு அதிகரித்துள்ளது குறித்து அவர் வினா எழுப்பினார்.

அமைச்சர் வரவில்லை
ஆனால், துறைரீதியாக கேள்வி எழுப்பும்போது, அந்த துறையின் அமைச்சர் இருக்க வேண்டும் என்பது மரபாகும். ஆனால், சுற்றுச்சூழல் அமைச்சர் அணில் தவே அவையில் இல்லை. இதனால், திடீரென சலசலப்பு நிலவியது.
காங். கண்டனம்
காங்கிரஸ் மூத்த எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் எழுந்து பேசுகையில், “ சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தனது துறைரீதியாக கேள்வி எழுப்பும் போது அவைக்கு வராமல் இருப்பது இது 2வது முறையாகும். இது அவைத் தலைவர் கண்டிக்க வேண்டும்’’ என்றார்.
வேதனை
இதையடுத்து, பேசிய அவைத் தலைவர் ஹமீது அன்சாரி, “ இதுபோல் பல ஆண்டுகளாக நான்பார்த்தது இல்லை. ஒரு துறைரீதியான கேள்வி எழுப்பப்படும் போது, அந்த துறையின் அமைச்சர் அவையில் இருக்க வேண்டும் என்பது அவரின் கடமையாகும். மிகவும் அசாதாரன சூழல் நிலவுகிறது. இது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கவனிக்க வேண்டும்’’ என்றார்.
மன்னிப்பு
அதன் பின், அமைச்சர் அணில் தவேக்கு பதிலாக பதில் அளிக்க வேண்டிய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவைக்கு தாமதமாக வந்தார். மக்களவையில் ஒரு மசோதாவை தாக்கல் செய்ததால், தாமதம் ஏற்பட்டது, அதற்கு மன்னிப்பு கோருகிறேன் என்றுஜவடேகர் தெரிவித்தார். இதற்கு முன் சுற்றுச்சூழல் துறையை ஜவடேகர் பொறுப்பு ஏற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டிப்பு
இதையடுத்து ஹமீது அன்சாரி பேசுகையில், “ உங்கள் துறை சார்பாக கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், நீங்கள் அவையில் இல்லை. எப்போதும் இல்லாத ஒரு சூழல் அவையில் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக அவையில் இதுபோல் நான் பார்த்தது இல்லை. துறைரீதியான கேள்வி எழுப்பும் போது, அந்ததுறைக்கான அமைச்சர் அவையில் இருக்க வேண்டும் என்பது தெரியாதா?’’ என்றார்.
இதனால், மத்திய அமைச்சர் ஒருவர் துறைரீதியான கேள்வி எழுப்பு் போது அவைக்கு வராததால், அரசுக்கு அவையில் தலைகுனியும், தர்மசங்கடமும் ஏற்பட்டது.
