‘ரிப்பன்’ வெட்டுவதற்காக நான் பிரதமர் பதவிக்கு வரவில்லை…ஊழல்வாதிகளுக்கு பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை
நான் ரிப்பன் வெட்டுவதற்காகவும், அரசு நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்து குத்துவிளக்கு ஏற்றுவதற்காகவும் நாட்டின் பிரதமராக வரவில்லை, கருப்பு பணத்தையும், ஊழலையும் ஒழிக்க வந்து இருக்கிறேன். மக்கள் என்னை நாட்டின் கண்காணிப்பாளராக நியமித்துள்ளனர் என பிரதமர் மோடி ஊழல்வாதிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.
ரூ.12 ஆயிரம் கோடி
உத்தரகாண்ட் மாநிலம், டேராடூன் நகருக்கு நேற்று பிரதமர் மோடி சென்று இருந்தார். அங்கு ரூ.12 ஆயிரம் கோடி செலவில், 900 கி.மீ. தொலைவு சார் தாம் நெடுஞ்சாலைப் பணிக்கான அடிக்கல் நாட்டினார். அதன்பின் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் திரளான மக்கள் முன் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது-
5 கோடி மக்கள்
என்னுடைய அரசு ஏழைக்களுக்கான அரசு. ஏழைகளின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்கு முன் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மானிய சமையல் கியாஸ்சிலிண்டர்களை 9-ல் இருந்து 12 ஆகத்தான் உயர்த்தியது. ஆனால், என்னுடைய அரசு வந்தபின், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 5 கோடி மக்களுக்கு கியாஸ்சிலிண்டர்கள் கொடுத்து இருக்கிறோம்.
காங்கிரஸ் மீது தாக்கு
கடந்த ஆட்சியாளர்கள் 40 ஆண்டுகளாக நாட்டை ஆண்டும், 18 ஆயிரம் கிராமங்கள் இன்னும் 18 ம் நூற்றாண்டைப் போல மின்வசதி இன்றி, பின்தங்கிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், என்னுடைய அரசு வந்தபின், 12 ஆயிரம் கிராமங்களுக்கு மின்இணைப்பு கொடுத்து இருக்கிறோம். இன்னும் 6 ஆயிரம் கிராமங்களுக்கு மின்வசதி கொடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதுதான் ஏழைமக்களை முன்னேற்றும் பணியாகும்.
கருப்புபணம்
நாட்டில் ஊழல், கருப்புபணத்தை ஒழிக்கும் வகையில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளைத் தடை செய்ததை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்ச்சிக்கின்றன. எனது இந்த முடிவால், வீடுகளில் அலமாரிகளிலும், மெத்தைகளுக்கு அடியில் பதுக்கப்பட்டு இருந்த கருப்புபணம் வங்கிக்கு வந்துவிட்டது.
ரிப்பன்வெட்ட வரவில்லை
என் மீது குறை சொல்லபவர்களுக்கு ஒன்றை சொல்லுகிறேன், நான் ரிப்பன்வெட்டுவதற்காக பிரதமர் பதவிக்கு வரவில்லை. நாட்டை கண்காணிக்கும் பணியை மக்கள் எனக்கு கொடுத்து இருக்கிறார்கள். ஊழல் நாட்டை அழித்துவிட்டது.
நாடு வளர்ச்சி பெற வேண்டுமானால், ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். மோடிக்கு ஒன்றும் தெரியாது, பார்க்கமாட்டார் என நினைத்து, ஒரு சிலர் புறவாசல் வழியாக கருப்புபணத்தை வெள்ளையாக மாற்றிவருகின்றனர். ஆனால், எனக்கு அவர்கள் செய்வது எனக்கு தெரியும், இப்போது நடவடிக்ைக எடுத்து வருகிறோம்.
போர் தொடரும்
ஊழல், கருப்புபணத்துக்கு எதிரான எனது போர் தொடரும். நான் கருப்புபணத்துக்கு எதிராக மட்டும் போராடவில்லை, கருப்பு மனம் படைத்தவர்களுக்கு எதிராகவும் போராடுகிறேன். நாட்டை சுத்தம் செய்யும் இயக்கம் நடந்து வருகிறது. எனது இந்த ரூபாய் நோட்டுதடை அறிவிப்பால் பல சிரமங்கள் இருந்த போதும் மக்கள் எனக்கு மிகப்பெரிய ஆதரவு அளித்துள்ளனர்.
ராணுவத்தினருக்கு ஓய்வூதியம்
கடந்த 40 ஆண்டுகளாக ஆண்ட குடும்பத்தினர் ராணுவ வீரர்களுக்கான ஒரு பதவி, ஒரு ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்தவில்லை ஆனால், நாங்கள் முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து, முதல் தவணையையா அளிக்கத் தொடங்கிவிட்டோம். பிரதமர் மோடி ராணுவ வீரர்கள் மீது தனி மரியாதையும், அன்பும் கொண்டவர் என்பதால், பயந்து காங்கிரஸ் கட்சி பொதுத்தேர்தலுக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
