சந்திரயான் 2 திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் சிக்னல் கிடைக்காமல் அதன் வெற்றிப் பயணத்தில் தடங்கல் ஏற்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறி பேசினார். அப்போது விஞ்ஞானிகளும், குறிப்பாக பெண் விஞ்ஞானிகள் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வழிய அழுது தீர்த்தனர்.

சந்திரயான்- 2 திட்டத்தின் முக்கிய நிகழ்வான, 'விக்ரம் லேண்டர்' நிலவின் தென் துருவ பகுதியில் 70 டிகிரி கோணத்தில் மான்ஸினஸ்- சிம்பிலியஸ்- எஸ் இடையே உள்ள பள்ளத்தாக்கில் மெதுவாக தரையிறக்கும் போது 2.1 கி.மீ தொலைவில் இருந்த லேண்டர் தகவல் தொடர்பை இழந்தது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சந்திரயான் 2 தரையிறக்கம் தடைபட்டது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இன்று பெங்களுருவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "அறிவியல் ஆராய்ச்சியில் தோல்வி என்பதே கிடையாது. 

நாட்டுக்கான உங்களது பங்களிப்பை வார்த்தையால் விவரிக்க முடியாது. பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் நாம் பயணிப்போம் என மோடி உருக்கமாக பேசினார். அப்போது விஞ்ஞானிகள் உணர்ச்சி பெருக்கால் கண்ணீர் சிந்தினர். குறிப்பாக பெண் விஞ்ஞானிகள் கதறி அழுதனர்.

இதையடுத்து பிரதமர் மோடி ஒவ்வொரு விஞ்ஞானியையும் தனித்தனியாக சந்தித்து கைகுலுக்கு ஆறுதல் தெரிவித்தார். அதனால் விஞ்ஞானிகள் அனைவரும் கண் கலங்கினர். இறுதியில் பிரதமரை வழி அனுப்பும்போது இஸ்ரோ தலைவர் கண்ணீர் விட்டு அழுததும், அவரைக் கட்டிப்பிடித்து மோடி ஆறுதல் சொன்னதும் உணர்ச்சிப் பெருக்கின் உச்சகட்டமாக அமைந்தது.