காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு, ஜவான்களுக்கு துரோகம் இழைத்ததாக பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற பரிவர்த்தன் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மோடி, இன்னும் ஆயிரம் நாட்களில் கிராமப்புறங்களில் முழுமையான மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மத்திய அரசின் திட்டங்கள் மீதான விமர்சனங்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே அரசியல் ஆதாயம் தரும் என எதிர்கட்சியினரை மோடி மறைமுகமாக விமர்சித்தார். ராணுவ ஜவான்களுக்கான ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் திட்டத்தின் கீழ் இதுவரை 6,600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு ஜவான்களுக்கு துரோகம் செய்துள்ளதாக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ரூபாய் நோட்டு விவகாரத்தால் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை தன்னால் உணர முடிவதாகவும், ஊழலுக்கு எதிராக சண்டையிட்டு நாட்டை முன்னேற்ற தனக்கு உதவிட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், முன்பு சொன்னதுபோல் ஊழல்வாதிகள் தற்போது தண்டிக்கப்படுவதாகவும், நவம்பர் 8ஆம் தேதி வெளியிட்ட ஒரே அறிவிப்பால் கள்ளநோட்டு, தீவிரவாதம், மனித மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்டவை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக மோடி பெருமிதம் தெரிவித்தார்.
