ஆண் துணை இல்லாமல், முஸ்லிம் பெண்கள் ‘ஹஜ்’ புனிதப் பயணம் செய்யலாம்..!பிரதமர் மோடி பேச்சு..!
ஆண்கள் துணை இல்லாமல் முஸ்லிம் பெண்கள் ‘ஹஜ்’ புனிதப் பயணம் மேற்கொள்ளும் வகையில் அவர்களுக்கு இருந்த தடைகளை என்னுடைய அரசு நீக்கியுள்ளது என்று பிரதமர் மோடி மான் கி பாத் உரையில் பேசினார்
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை தோறும் ‘மனதில் இருந்து பேசுகிறேன்’ எனும் ( மான் கி பாத்) வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.
அவரது உரையை வானொலி மூலமும், செல்போன் மூலமும் கேட்கலாம். அதன்படி, இந்த ஆண்டின் கடைசி வானொலி நிகழ்ச்சியில் நேற்று பிரதமர் மோடி பேசியதாவது-
முஸ்லிம் சமூகத்தில் உள்ள பெண்கள் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டுமானால், ஆண்கள்துணையில்லாமல் செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. அந்த கட்டுப்பாடுகளை எங்களது அரசு நீக்கியுள்ளது. 45வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள தனியாக விண்ணப்பிக்கலாம். இதுபோன்ற பிரச்சினைகளை நமது சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது.
இந்த விதிமுறைகளை நான் முதலில் கேட்டபோது, வியப்படைந்து, யார் இதுபோன்ற கட்டுப்பாடுகளை யார் கொண்டு வந்தது எனக் கேட்டேன்?.ஏன் இந்த வேறுபாடு?. இந்த விஷயத்தில் நான் ஆழமாக ஆய்வு செய்து பாரத்்தபோது, சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாக ஏன் இப்படி கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள் எனக் கேட்டு வியப்படைந்தேன். பல ஆண்டுகளாக முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஆனால், யாரும் இதுகுறித்து விவாதிக்கவில்லை.
இதுபோன்ற கட்டுப்பாடுகள் எல்லாம் பல முஸ்லிம் நாடுகளில் இருந்து தடை செய்யப்பட்டுவிட்டது. கேரளா முதல் வடஇந்தியா வரை, ஹஜ் புனிதப் பயணித்துக்கு இந்த ஆண்டு 1300 முஸ்லிம் பெண்கள் ‘மஹ்ரம்’ எனச் சொல்லக்கூடிய ஆண்கள் துணை இல்லாமல் விண்ணப்பித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த பெண்கள் பாதுகாப்பாக சென்றுவர நான் வாழ்த்துகிறேன்.
ஹஜ் புனிதப் பயணத்துக்கு பெண்கள் தனிமையில் செல்ல விண்ணப்பம் செய்யவைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சிறுபான்மை துறை விவகாரத்துறை அமைச்சரிடம் ஆலோசித்துள்ளேன்.
வழக்கமாக குலுக்கல் முறையில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால், தனியாக வரும் பெண்கள் இந்த குலுக்கல் முறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அவர்களுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்து வாய்ப்பு வழங்க வேண்டும்.
இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் என்பது, பெண்களுக்குஅதிகாரத்தையும், திறமைக்கு முக்கியத்துவத்தையும், சமமான வாய்ப்புகளையும் வழங்கும் என்பதை உறுதி செய்யும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.