ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பிய பிரதமர் மோடி, இன்று கோவா சென்றார். அங்கு விமான நிலையம் மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றாா். 

பின்னா் அவர் பேசும்போது, நாட்டில் கறுப்புப்பணம் என்கிற நோய் 70 ஆண்டுகளாக தொற்றிக்கிடந்து வருகிறது. கடந்த 18 மாதங்களாக அதற்கு மருத்துவம் செய்து சிகிச்சை அளிக்க, இந்த அரசு தொடங்கியுள்ளது.

கறுப்புப்பணத்தை ஒழிக்க வேண்டும் என்று மக்கள் தான் கேட்டுக்கொண்டார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த அதிரடிநடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும்,கடமையும் எனக்கு உள்ளது. கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டால் மக்களுக்கான அதிகாரம் முழுவதுமாக கிடைக்கும். அந்த அதிகாரத்தை வழங்கவே இந்த நடவடிக்கை என பிரதமா் திரு. நரேந்திர மாேடி தொிவித்துள்ளாா்.

நாட்டில் சீர்திருத்தம் வர வேண்டும் என்றால் சில சிரமங்களும் வரத்தான் செய்யும். அதை மக்கள் எதிர்கால நன்மை கருதி பொறுத்துக்கொள்ள வேண்டும்.

எதிர்கட்சிகள் அரசின் செயல்பாடுகளில் குற்றம் கண்டுபிடிப்பதிலேயே குறியாக இருக்கின்றன. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கறுப்புப்பணத்திற்கு எதிராக எந்த உறுதியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு மக்களுக்கான அரசு. 20 கோடிக்கும் மேலான மக்கள் வங்கிக் கணக்குகளை தொடங்கியுள்ளனர். மக்கள் மாற்றங்களை நோக்கி பயணிக்கின்றனர்.

மக்களுக்கான நன்மை கருதி, நல்ல திட்டங்களை கொண்டு செலுத்த இந்த அரசு தயங்காது. கறுப்பு பணத்துக்கு எதிராக அரசு எடுத்த உறுதியான முடிவைப்போல பினாமி சொத்துக்கள் மீது அடுத்த அதிரடி பாயும்.

பினாமி சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அரசு தயங்காது என்று முழங்கினார். பினாமி சொத்துக்கள் வைத்திருப்பவர்களுக்கு வயிற்றில் புளியை கரைத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.