கலங்காமல் கடமையைச் செய்யும் மோடி! புதிய ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்தார்!
தாய் ஹீராபென்னை இழந்த சோகத்திலும் சோர்ந்துவிடாமல் கொல்கத்தாவில் புதிய திட்டங்களை காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
மேற்கு வங்கத்தில் புதிய நலத்திட்டங்களைத் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்க இருந்த பிரதமர் மோடி தனது தாய் மறைவால் அதில் நேரில் பங்கேற்க முடியவில்லை. ஆனால் காணொலிக் காட்சி மூலம் கலந்துகொண்டார்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பங்குபெற்ற இந்த நிகழ்ச்சியில், இரண்டு முக்கிய ரயில்வே திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. கொல்கத்தாவிலிருந்து ஜல்பைகுரி வரை வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படும் புதிய வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையையும், கொல்கத்தாவில் புதிய வழித்தடத்தில் இயங்கும் புதிய மெட்ரோ ரயில் சேவையையும் மோடி பச்சைக்கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "மத்திய அரசு இந்திய ரயில்வேயை நவீனமயமாக்க இதுவரை இல்லாத அளவுக்கு முதலீடுகளைச் செய்துவருகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், தேஜாஸ் எக்ஸ்பிரஸ், ஹம்சஃபார் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் அதனால் உருவாகியுள்ளன. ரயில்வே துறை நவீனமயமாக்கத்தில் அடுத்த எட்டு ஆண்டுகள் புதிய பாதையாக இருக்கும்" கூறினார்.
தொடக்க விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், பிரதமர் மோடி தனது தாய் மறைந்த இந்த கடினமான சூழலில் தவறாமல் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.
பிரதமரை பப்பாஞ்சி ஆக்கிட்டாங்க! கொந்தளிக்கும் கேரள பாஜக தொண்டர்கள்!
இதுமட்டுமின்றி இன்றைய நிகழ்ச்சியில் மொத்தம் ரூ.7,800 கோடி மதிப்பிலான நலத்திடங்களையும் இன்று தொடங்கி வைக்கிறார். குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியிலும், கங்கா கவுன்சிலின் 2வது கூட்டத்திலும் மோடி காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்கிறார்.