தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முதலமைச்சரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் சில தினங்களுக்கு அவர் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனிடையே முதலமைச்சரை காண பல்வேறு தலைவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்து சென்றனர். பிரதமர் நரேந்திர மோடியும் முதலமைச்சரை காண விரைவில் வருவார் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி, அங்கிருந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் குழுத்தலைவர் மைத்ரேயன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் ஆகியோரிடம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், முதலமைச்சர் ஜெயலலிதா போர்க்குணம் மிக்கவர் என்று பிரதமர் மோடி பாராட்டிப் பேசியுள்ளார்.
