ஊழல், கருப்பு பணம் பதுக்கல் ஆகியவற்றுக்கு அதிக அளவில் ரொக்க பணம் புழக்கம் இருப்பதே காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி தான் எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த மாதம் 8-ந்தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து மத்தியஅரசுநாள்தோறும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பின்னணி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி லிங்டுஇன் தளத்தில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஊழல்
21-வது நூற்றாண்டின் இந்தியா ஊழல் இல்லாத இந்தியாவாக இருக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியை ஊழல்தான் இந்த தடுத்து வருகிறது. ஏழைகள், நடுத்தர மக்களின் கனவுகளையும் சீர் குலைக்கிறது.

ஊழல், கருப்பு பணம் பதுக்கல் ஆகியவற்றுக்கு நடைமுறை வாழ்க்கையில் அதிக அளவில் ரொக்க பணம் புழங்குவதே காரணம். எனவே, ரொக்க பணத்தின் பயன்பாடுகளை குறைப்பது அவசியமாகிறது. இதற்காகவே இதுபோன்ற முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம்.

இளைஞர்கள்

நான் அனைத்து மக்களையும் குறிப்பாக இளைஞர்களையும் கேட்கிறேன். இந்த மாற்றத்தை நீங்கள் தலைமை ஏற்று செய்யுங்கள். மற்றவர்களை பணமில்லாத பரிவர்த்தனைக்கு மாற்றுங்கள். ஊழல் அல்லாத கருப்பு பணம் இல்லாத இந்தியாவை கட்டமைக்க நாம் அடித்தளம் அமைக்கலாம்.

‘மொபைல்’ உலகம்
இன்று நாம் மொபைல் வங்கி, மொபைல் வாலட்ஸ் என புதிய உலகத்தில் வாழ்ந்து வருகிறோம். உணவு, பர்னிச்சர்களை வாங்குவது, விற்பது, பயணத்துக்கு டாக்சிகளை அழைப்பது என அனைத்துக்கும் மொபைல் போன் மூலம் ஆர்டர் செய்து பயன்படுத்துகிறோம். தொழில்நுட்பம் நமக்கு வேகத்தையும், வசதியையும் கொண்டுவந்துள்ளது. 

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இ-வாலட்ஸ் போன்றவற்றை உங்களில் பலர் தொடர்ந்து பயன்படுத்துகிறீர்கள். இதன் மூலம் ரொக்க பணம் பரிமாற்றம் அல்லாத வர்த்தகத்தை அதிகரிக்க அனைத்து சாதகங்களும் உள்ளன.

வாய்ப்பு
நான் நவம்பர் மாதம் 8-ந்தேதி எடுத்த முடிவு ரூ.500, ரூ.1000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு அனைத்து தரப்பினருக்கும் தங்களை உயர்த்திக்கொள்ள ஒரு வாய்ப்பை தந்து இருக்கிறேன். இதன் மூலம் இந்த நாட்டை பொருளாதார ரீதியாக மாற்றுவதற்கு நீங்கள் முக்கிய பங்கை அளிக்கிறீர்கள்.



நான் கொண்டு வந்த திட்டம் மக்களுக்கு சிரமத்தை கொடுத்து வருகிறது என்பது நான் நன்கு அறிவேன். ஆனால், இந்த பாதிப்புகள் குறுகிய காலத்துக்கு மட்டுமே, நீண்டகாலத்தில் மகிழ்ச்சியையும், லாபத்தை தரும். எனவே, இதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஆதரவு
இந்த குறைந்த கால கஷ்டத்தால் நீங்கள் அடைய போகும் நீண்ட கால நன்மையை நினைத்து உண்மையிலேயே நான் சந்தோ‌ஷம் அடைவேன்.



நான் சமீப நாட்களாக உத்தரபிரதேசம், கர்நாடகா, கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்தேன். கிராமம் மற்றும் நகர மக்களை சந்தித்தேன். அவர்களிடம் நான் ஊழலையும், கருப்பு பணத்தையும் ஒழிக்க ஏழைகளும், நடுத்தர மக்களும் தங்களது பங்களிப்பை தர வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அனைவரும் நாங்களும் எங்கள் பங்களிப்பை தருவோம் என்று கூறினார்கள்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.