சுடுகாட்டில் தூங்கிய எம்.எல்.ஏ.,! ஏன் தெரியுமா?
சுடுகாட்டை சீரமைக்கும் பணியில், தொழிலாளர்கள் அச்சப்பட்டதால், அவர்களின் பயத்தைப் போக்க, எம்.எல்.ஏ. ஒருவர் சுடுகாட்டில் படுத்து தூங்கிய சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகோல் எம்.எல்.ஏவான நிம்மல ராம நாயுடு, அப்பகுதியில் உள்ள சுடுகாட்டை புதுப்பிக்க அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற அரசு, சுடுகாட்டை சீரமைக்க 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத அந்த சுடுகாட்டை சீரமைக்க யாருமே டெண்டர் எடுக்க முன்வரவில்லை. கடைசியாக ஒருவர் டெண்டர் எடுத்து பணிகளைத் துவக்கினார்.
சீரமைக்கும் பணி துவங்கிய சில நாட்களிலேயே பேய், பிசாசு உலவுவதாக வதந்தி பரவியது. இதனால் தொழிலாளர்கள் யாரும் பணி செய்ய முன் வரவில்லை.
இதனை அடுத்து, தொழிலாளர்களின் பயத்தைப் போக்க, எம்.எல்.ஏ. நிம்மல ராம நாயுடு, நேற்று முன்தினம் உணவு மற்றும் கட்டிலுடன் சுடுகாட்டுக்கு சென்று அங்கேயே சாப்பிட்டு விட்டு உறங்கினார்.
இதன் பின்னர், அடுத்த நாள் காலை வீட்டுக்கு நிம்மல ராம நாயுடு வீட்டுக்கு சென்றார். சுடுகாட்டில் இருந்தபோது அவருடன் ஒரு உதவியாளர் மட்டுமே இருந்துள்ளார்.
எம்.எல்.ஏ.வின் இந்த முயற்சியால் சுடுகாட்டை சீரமைக்கும் பணியை தொழிலாளர்கள் தொடங்கி உள்ள்னர். தொழிலாளர்களின் பேய், பிசாசு பயத்தைப் போக்கவே இப்படி செய்ததாக எம்.எல்.ஏ. நிம்மல ராம நாயுடு தெரிவித்தார்.