mla plant tree with his own expense
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் சாலை விரிவாக்கப்பணிக்கு மரங்களை வெட்ட அதிகாரிகள் முயன்றபோது, எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் 4 அரச மரங்களை வேரோடு அகற்றி மாற்று இடத்தில் நடுவதற்கு ஏற்பாடுகள் செய்தார்.
விரிவாக்க பணி
விஜயவாடா தொகுதி எம்.எல்.ஏ. பென்னமலூரு போடே பிரசாத். விஜயவாடா,மசூலிபட்டணம் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவுபடுத்தும் பணி 65 கி.மீ. அளவுக்கு நடந்து வருகிறது.
மாற்று இடம்
இந்நிலையில், தடிகாடப்பா பாலத்தின் அருகே இருக்கும் 4 அரச மரங்களை அதிகாரிகள் வெட்ட வேண்டிய சூழலுக்கு ஆளாகினர். ஆனால், இதைக் கவனித்த எம்.எல்.ஏ. பிரசாத், தனது சொந்த செலவில், மரங்களை வேறோடு அகற்றி மாற்று இடத்தில் நட ஏற்பாடு செய்தார்.

கிரேன் மூலம்
இந்த பணியில் உள்ளூர் மக்களும், நெடுஞ்சாலைத் துறையினரும், போலீசாரும் ஈடுபட்டனர். மரத்தை சுற்றி 4 ஆடி அகலம், ஆழத்துக்கு குழி தோன்டி, வேர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மரத்தை கவனமாக கிரேன் மூலம் அகற்றினர். அவற்றை பெரிய லாரியில் ஏற்றி, பந்தர் கால்வாய் பகுதியில் ஆழமாக குழிதோண்டி அதில் நட்டனர்.
வேதனையாக இருந்தது
இது குறித்து எம்.எல்.ஏ. பிரசாத் கூறுகையில், “ இந்த மரங்களை நான் சிறுவயதில் இருந்து பார்த்து வருகிறேன். சாலை அகலப்பணிக்காக இவைகள் வெட்டப்படும்போது, மனது பொறுக்கவில்லை, வேதனையாக இருந்தது. ஆனால், அதிகாரிகளோ, எந்தவிதமான சிந்தனையும் இன்றி மரங்களை வெட்டிவிடுவார்கள்.மாற்று வழி குறித்து சிந்திக்க மாட்டார்கள்.
சிந்தியுங்கள்
அரச மரம், ஆலமரம், கனக மரம் உள்ளிட்டவைகளுக்கு சிறிய அளவு வேர் நன்றாக இருந்தாலே எளிதாக வேர்பிடித்து முளைத்து விடும். சாலை அகலப்பணிக்கு இனிமேல் மரங்களை வெட்டும்போது, ஒருமுறைக்கு பல முறை அதிகாரிகள் சிந்திக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.
நெடுஞ்சாலை அகலபணிக்காக ஏற்கனவே ஆயிரக்கனக்கான மரங்களை அதிகாரிகள் வெட்டி சாய்த்த நிலையில், இந்த 4 மரங்கள் மட்டுமே எம்.எல்.ஏ. மூலம் காப்பாற்றப்பட்டுள்ளன.
