நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்கம் மாநிலத்திற்கு நிதி கேட்டு பேசிய போது தனது மைக் அனைக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்த நிலையில் அவருக்கு ஆதரவாக ஸ்டாலின் குரல் எழுப்பி உள்ளார்.

2024 - 25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகக் கூறி தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுவை, கேரளா உள்பட 8 மாநில முதல்வர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனிடையே மேற்கு வங்கம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் பங்கேற்றார். ஆனால், கூட்டம் முடிவதற்கு முன்பாகவே மம்தா பானர்ஜி பாதியில் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எதிர்க்கட்சிகளில் இருந்து பங்கேற்ற ஒரே ஒரு முதல்வரான எனக்கு கூட்டத்தில் பேச உரிய நேரம் வழங்கப்படவில்லை. மேற்கு வங்கம் மாநிலத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கூறும்போது எனது மைக் அனைக்கப்பட்டது.

பாஜக முன்னாள் எம்.பி. மாஸ்டர் மதன் உடல்நலக்குறைவால் காலமானார்

நான் பேசத் தொடங்கி 5 நிமிடங்களில் எனது பேச்சு நிறுத்தப்பட்டது. எனக்கு முன்னால் பேசியவர்கள் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேச அனுமதிக்கப்பட்டனர். மத்திய பட்ஜெட் ஒருதலைபட்சமாகவும், அரசியல் ரீதியாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாது. என்னை பேச விடாமல் தடுத்தது நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளையும் அவமதித்ததாகும்” என்றார்.

வீட்ல ஒத்த ரூபா கூட இல்ல, வந்ததுக்கு நானே 20 ரூபா வச்சிட்டு போறேன்; திருடனின் செயல் இணையத்தில் வைரல்

இந்நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை இப்படியா நடத்துவது? எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் அங்கம் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தில் எதிர்க்கட்சிகளின் உரையாடல்களுக்கு மரியாதை அளிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.