ஒரு தடவ தான் தவறும்... அன்று பறிபோன வாய்ப்பு இன்று தேடி வந்தது.. ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு..!
BJP President Candidate 2022: கூட்டத்தின் முடிவில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு பெயர் தேர்வு செய்யப்பட்டது என ஜெ.பி. நட்டா தெரிவித்து இருக்கிறார்.
இந்தியாவில் கடந்த முறை நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் உத்தேச பட்டியலில் இடம்பிடித்து இருந்தவர் திரவுபதி முர்மு. 2017 குடியரசு தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது எனினும், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டு, அவர் தேர்தலில் வெற்றியும் பெற்றார்.
கடந்த முறை அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இம்முறை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டு இருக்கிறார். பா.ஜ.க. தலைமை கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற குழு கூட்டம் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் முடிவில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு பெயர் தேர்வு செய்யப்பட்டது என ஜெ.பி. நட்டா தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் முதன் முறையாக பழங்குடி இன பெண் வேட்பாளருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டு இருக்கிறார். வேட்பாளர்கள் அறிவிப்பு துவங்கியதை அடுத்து குடியரசு தலைவர் தேர்தல் களம் சூடுப்பிடிக்க துவங்கி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு: பா.ஜ.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபது முர்மு... யார் தெரியுமா?