உயர்த்தப்பட்டது பிரசவ கால விடுப்பு… 12 வாரத்திலிருந்து 26 வாரங்களாக மாற்றியமைப்பு…
அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களின் பிரசவ கால விடுப்பை 26 வாரமாக உயர்த்தும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பணியாற்றும் பெண்கள் தங்கள் முதல் இரு குழந்தைகளுக்கான பிரசவ காலத்திற்காக 12 வாரங்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது.
ஆனால், 12 வாரங்கள் மிகக் குறைவானது என்றும், சில தனியார் நிறுவனங்கள் குறைந்த காலம் மட்டுமே விடுப்பு எடுக்க அனுமதியளிக்கிறது எனவும் தேசிய மகளிர் ஆணையம் புகார் தெரிவித்திருந்தது.
இந்த பிரசவ கால விடுப்பை அதிகரிக்க செய்ய எழுந்த கோரிக்கையை அடுத்து 12 வாரமாக இருந்த விடுமுறை 26 வாரமாக மாற்றியமைக்கப்பட்டது.
இதற்கான சட்ட திருத்தம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்ட தொடரின் போது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் பிரசவ கால விடுப்பை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்க வழிசெய்யும் மசோதாவை மக்களவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டா தத்தாத்ரேயா கொண்டு வந்தார்.
உறுப்பினர்களின் விவாதத்திற்கு பின் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சட்டம் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டுள்ள நிறுவனத்திற்கு பொருந்தும் என்றும் இதனால் நாட்டில் உள் ள 18 லட்சம் பெண் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.