தமிழக அரசு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் உள்ளிட்ட இடஒதுக்கீடு பிரிவினருக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண்களை குறைத்து பிறப்பித்த அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தாழ்த்தப்பட்ட பிரிவினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினருக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண்ணில் 5 சதவீத சலுகை வழங்கி கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
இதனை எதிர்த்து ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 450 பேர் 2 பிரிவுகளாக சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை உயர்நீதிமன்றக் கிளையிலும் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி, தமிழக அரசு பிறப்பித்த ஆணை செல்லும் என அதே ஆண்டில் தீர்ப்பளித்தது.
ஆனால் மதுரை உயர்நீதிமன்றக் கிளை தமிழக அரசின் ஆணை செல்லாது என மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. இருவேறு தீர்ப்புகள் வழங்கியதை அடுத்து, தெளிவான விளக்கம் பெறுவதற்காக மனுதாரர்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் திரு.சிவகீர்த்தி சிங், திருமதி பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தியும் தீர்ப்பளித்தனர்.
இதன்மூலம், ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்றும், நீதிபதிகள் திட்டவட்டமாக தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்
