உணவை வீணாக்குவது ஏழைக்கு இழைக்கப்படும் அநீதி - ‘மான்கிபாத்’ உரையில் பிரதமர் மோடி அறிவுரை
உணவை வீணாக்குவது ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் இறுதி ஞாயிற்று கிழமைகளில் ‘மன் கி பாத்’ (மனதி்ன் குரல்) என்ற வானொலி நிகழ்ச்சியின் மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் நேற்று அவர் பேசியதாவது:-
என் அன்பான நாட்டு மக்களே, நாம் கருப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். பணத்தை ரொக்கமாக பயன்படுத்துவதை குறைத்து டிஜிட்டல் முறையில் ரொக்கமில்லா பணத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி ஊழலுக்கும், கருப்பு பணத்திற்கும் எதிரான யுத்தத்தில் தைரியம் மிக்க வீரர்களாக செயல்படுங்கள்.
உணவு குறித்து பேசிய மோடி, ‘உணவு வீணாக்கப்படுவது குறித்து ஏராளமானோர் என்னிடம் வருத்தம் தெரிவித்திருந்தனர். நாட்டில் உணவின்றி தவிப்பவர்களை நீங்கள் நினைத்து பார்த்துள்ளீர்களா?. உணவு வீணாவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உணவை வீணாக்குதல் என்பது ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி. தேவைக்கு போதுமான உணவை மட்டுமே உண்ண வேண்டும் என்று குழந்தைகளுக்கு பெரியோர் அறிவுரை கூற வேண்டும். இதுதொடர்பாக அதிக எண்ணிக்கையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது அவசியம்’ என்று குறிப்பிட்டார்.
நடப்பாண்டில் 2,500 கோடி டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடைபெறும் என மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 125 கோடி மக்கள் மனதுவைத்தால் 2,500 கோடி டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடப்பதற்கு ஓராண்டு தேவையில்லை; 6 மாதங்களே போதும். ஏழ்மை நிலையில் உள்ளவர்களும் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்வதை அறிந்து கொள்ள முயற்சித்து வருகின்றனர்.. டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்வதற்காக ‘பீம்’ மொபைல் செயலியை இரண்டரை மாதங்களுக்கு முன்பாக தொடங்கினோம். இதனை ஒன்றரை கோடி மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
நாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டு புதிய இந்தியா உருவாக வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ‘புதிய இந்தியா’ என்பது மத்திய அரசின் திட்டமோ, ஒரு அரசியல் கட்சியின் வாக்குறுதியோ அல்ல. புதிய இந்தியா என்பது நாட்டில் உள்ள 125 கோடி மக்களின் உணர்வு. நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதிய இந்தியாவை படைக்க வேண்டும் என்று கருதுகின்றனர். போக்குவரத்து விதிகளை அனைவரும் மதித்து நடந்தால், வாரம் ஒருநாள் பெட்ரோல், டீசலை உபயோகப்படுத்தாமல் இருந்தால், ஒவ்வொரு குடிமகனும் நேர்மையுடன் நடந்தால் அவை அனைத்தும் மிகப்பெரும் விஷயங்களாக இருக்கும்.
இந்தாண்டு நாம் 3-வது சர்வதேச யோகா தினத்தை கொண்டாட உள்ளோம். அதற்கு மக்கள் தயாராகி விட வேண்டும். இதுதொடர்பான ஆலோசனைகளை என்னுடைய மொபைல் செயலியின் வாயிலாக எனக்கு அனுப்பலாம்பாக்ஸ்
‘மன் கி பாத்’ உரையில் பேசிய மோடி, மகப்பேறு விடுப்பு காலத்தை 12 வாரத்தில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தி மத்திய அரசு மிக முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. வேலை முடிந்த பின்னர் குடும்பத்தை பெண்கள் கவனிக்க வேண்டியுள்ளது. பிரசவ காலங்களில் குறைந்த அளவு விடுமுறை வழங்கப்படுவதால், பிறந்த குழந்தையை பெண்கள் சரிவர கவனிக்க முடியாமல் போகிறது. இதனை தவிர்க்கவே மத்திய அரசு விடுமுறையை அதிகரித்துள்ளது. பிறந்தது முதல் சிறுவர்களாக ஆகும் வரை அன்னையின் அன்பும் அரவணைப்பும் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும். அதேபோன்று அன்னையும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.