'கொடை வள்ளலை' கைது செய்த போலீஸ்! திருட்டு பணத்தில் தானம் அளித்தால் போலீஸ் சும்மா இருப்பாங்களா என்ன?
திருடிய பணத்தை பிச்சைக்காரர்களுக்கும், கோயில்களுக்கும் தானமாக கொடுத்து, தன்னை வள்ளலாக அடையாளப்படுத்திக் கொண்ட 'கொடை வள்ளலை' போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
குஜராத்தை சேர்ந்தவர் ரமேஷ் பாய். மும்பையில் உள்ள கூரியர் நிறுவனத்தில் இவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கூரியர் நிறுவனத்தில் இருந்து ரூ.80 லட்சம் பணத்தை திருடிக் கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
இது குறித்து கூரியர் நிறுவனம், ரமேஷ் பாய் மீது போலீசில் புகார் அளித்தது. வழக்கு பதிவு செய்த மும்பை போலீஸ், அவரை தேடி வந்தது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் ரமேஷ் பாய் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.10.68 லட்சம், 118 கிராம் தங்கம், 5 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரமேஷ் பாய் கைது செய்யப்ப்டடது குறித்து போலீசார் கூறும்போது, கூரியர் கம்பெனியில் பணத்தைத் திருடிய ரமேஷ் போலீஸாரிடம் பிடிபடாமல் இருக்க பல்வேறு நகரங்களுக்குச் சென்றுள்ளார். கடைசியாக உத்தரபிரதேசம், விருந்தாவன் நகரில் வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்துத் தங்கியிருக்கிறார். திருடிய பணத்தை வைத்து, சொகுசு வாழ்க்கை நடத்திய அவர், அங்குள்ள அனுமன் கோயில் புனரமைப்புக்காக ரூ.50 ஆயிரத்தை நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.
கோயிலுக்கு செல்லும்போதெல்லாம், அங்குள்ள பிச்சைக்காரர்களுக்கு இரண்டாயிரம் ரூபாயை தர்மமாக வழங்கியுள்ளார். இதனால், பிச்சைக்காரர்கள் மத்தியில் கொடை வள்ளலாக ரமேஷ் பாய் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றும் கூறுகின்றனர்.
இதனிடையே, குறுகிய காலத்தில் எப்படி கொடை வள்ளல் ஆக முடியும்? யார் இந்த ரமேஷ் பாய்? என்று உள்ளூர் போலீசுக்கு சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், மும்பை போலீசார் உத்தரபிரதேச போலீசாரிடம் ரமேஷ் பற்றி விவரங்கள் கேட்டுள்ளனர். அதன் பிறகே ரமேஷ் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.