ரூபாய் நோட்டு மாற்றத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் ஆகியோர் ரிசர்வ் வங்கி சென்று பணம் இருப்பு குறித்து விசாரித்தனர். பின்னர், மத்திய அரசு தனது நடவடிக்கைகளை திரும்ப பெற்றுக்கொள்ள 3 நாள் கெடு விதித்துள்ளனர். 

கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும், கள்ள நோட்டுக்களை ஒழிக்கவும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என கடந்த 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நிதிஷ் தவிர மற்ற எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்றத்திலும், இது எதிரொலியானது.

நேற்று காலை திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா தலைமையில் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து முறையிட்டனர். பின்னர, திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில், நாடாளுமன்றத்தில் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக ஓட்டெடுப்புடன் கூடிய தீர்மானத்துக்கு நோட்டீஸ் அளித்துள்ளது.

இதை தொடர்ந்து இன்று காலை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் பேரணியாக ரிசர்வ் வங்கி சென்றனர். அங்கு இருவரும் ரிசர்வ் வங்கியி்ல் எவ்வளவு பணம் உள்ளது. சூழ்நிலை சுமுக நிலைக்கு திரும்ப இன்னும் எத்தனை நாளாகும். எவ்வளவு பணம் அச்சடிக்கப்பட்டுள்ளது உள்பட பல்வேறு விபரங்களை கேட்டறிந்தனர். இதுகுறித்து , கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது, அரசியல் சட்டத்தை பிரதமர் மோடி உடைத்துள்ளார். இந்த திட்டத்தை அமல்படுத்தும் முன்னர் மத்திய அரசு ஏன் முறையாக செயல்படுத்தவில்லை. இந்த திட்டம் காரணமாக சாமான்ய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் மத்திய அரசுக்கு 3 நாள் கெடுவிதிக்கிறோம். அதற்குள் பிரச்னைகளை தீர்க்க வேண்டும். இல்லாவிட்டால், நாங்கள் உங்களை சும்மாவிட மாட்டோம். நாங்கள் இன்னும் உயிருடன் தான் உள்ளோம் இருக்கிறோம் என்றார்.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில், மத்திய அரசு தனது முடிவை 3 நாளில் திரும்ப பெற வேண்டும். மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம். இல்லாவிட்டால் மக்கள் புரட்சியில் ஈடுபடுவார்கள். ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டது, சுதந்திரத்துக்கு பிறகு நடந்த மிகப்பெரிய மோசடி என்றார்.