பாஜகவின் ராஜதந்திரம்: மம்தாவின் பழைய நண்பரை வைத்தே அவரை காலி செய்ய வியூகம்! நந்திகிராமில் மம்தா-சுவேந்து மோதல்
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியை அவரது திரிணாமூல் காங்கிரஸிலிருந்து பாஜகவிற்கு வந்த சுவேந்து அதிகாரியை வைத்தே காலி செய்ய திட்டமிட்டு, அதற்காக மம்தாவை தூண்டிவிட்டதையடுத்து, மம்தாவும் சுவேந்துவும் நந்திகிராம் தொகுதியில் மோதுகின்றனர்.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 27ம் தேதி நடக்கிறது. நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து, அவரது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்துவருகிறார். கடந்த 2 சட்டமன்ற தொகுதிகளிலும் பவானிபூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டுத்தான் மம்தா பானர்ஜி வென்றார்.
மேற்குவங்கத்தில் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டும் பாஜக, அதற்காக பல வியூகங்களை வகுத்து அதை சரியாக செயல்படுத்தியும் வருகிறது. அதன் ஒருபகுதியாக, சுவேந்து அதிகாரிக்கு அதிக செல்வாக்கு இருக்கும், அவரது சொந்த தொகுதியான நந்திகிராமில் போட்டியிடுமாறு மம்தா பானர்ஜிக்கு சவால் விடுத்து அவரை தூண்டிவிட்டு, மம்தாவை நந்திராம் தொகுதியில் போட்டியிட வைத்துள்ளனர். சுவேந்துவின் சவாலை ஏற்று மம்தா பானர்ஜி, கடந்த 2 முறையும் வெற்றி பெற்ற பவானிபூர் தொகுதியை விட்டு, இம்முறை நந்திகிராமில் போட்டியிடுகிறார்.