பஸ்கள் மீது கற்கள் வீச்சு; கர்நாடகாவுக்கு பஸ் போக்குவரத்தை நிறுத்தியது மகாராஷ்டிரா; முற்றும் எல்லைப் பிரச்சனை!
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இருமாநிலங்களுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், மகாராஷ்டிரா போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா, கர்நாடகா இடையே எல்லைப் பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஏற்கனவே எல்லை தொடர்பான பிரச்னையை மகாராஷ்டிரா அரசு உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றுள்ள நிலையில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்துக்குள் செல்லும் மகாராஷ்டிரா பஸ்கள் மீது கற்களை எறிந்த காரணத்தால், அந்த மாநிலத்திற்குச் செல்லும் எம்எஸ்ஆர்டிசி பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தற்போதைக்கு தடை செய்யப்பட்டு இருக்கும் பஸ் போக்குவரத்து, போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், பயணிகளுக்கு பாதிப்பு இல்லாத நிலையில், மீண்டும் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இருமாநிலங்களுக்கு இடையே நிலவும் எல்லைப் பிரச்சனை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேச இருப்பதாக நேற்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பத்திரிகையாளர்களின் சந்திப்பில் தெரிவித்து இருந்தார். மேலும் அவர் கூறியிருந்த தகவலில், கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் எல்லைப் பிரச்சனை குறித்து பேசி இருக்கிறேன். கர்நாடகாவுக்கு சரத்பவார் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று அப்போது தெரிவித்தேன். மத்திய அமைச்சர் இந்த விஷயத்தில் விரைவில் முடிவு காண்பார். இருமாநில மக்களும் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும். மகாராஷ்டிரா மக்கள் சட்டத்தை தங்களது கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. '' என்று கேட்டுக் கொண்டு இருந்தார். மகாராஷ்டிரா எவ்வாறு சட்டம் ஒழுங்கை பேணுகிறதோ அதேபோன்று, கர்நாடகா அரசும் தங்களது எல்லைக்குள் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். பஸ்கள் மீது கற்கள் வீசுவது, பொது சொத்துக்களை அழிப்பது இருதரப்புக்கும் நல்லதல்ல'' என்று தெரிவித்து இருந்தார்.
மகாராஷ்டிரா கர்நாடகா இடையே தொடரும் எல்லைப் பிரச்சனையும், காரணங்களும்!!
இதற்கிடையே எல்லைப் பிரச்சனை குறித்து கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை டுவீட் செய்து இருக்கிறார். அந்த டுவீட்டில், ''என்னிடம் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் இருவரும் செவ்வாய் கிழமை பேசி இருந்தனர். இரு மாநிலங்களும் சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இருதரப்பிலும் சட்டம், ஒழுங்கை கடைபிடிப்பது என்று ஒப்புக் கொண்டோம். இருமாநில மக்களுக்கும் இடையே சுமூகமான சூழல் நிலவி வருகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகா, மகாராஷ்டிரா இடையே கடந்த 1956ஆம் ஆண்டில் இருந்து எல்லைப் பிரச்சனை நிலவி வருகிறது. இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கு நான்கு பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.