Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை - ஆளுநர் வித்யாசாகர் ராவ்

law and-order-no-problem
Author
First Published Dec 5, 2016, 11:19 AM IST


முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கவர்னர் வித்யாசாகர் ராவிடம் கேட்டுள்ளார். அதற்கு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் இல்லை என கவர்னர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இரவு 8 மணி முதல் இன்று அதிகாலை 3 மணி வரை ஜெயலலிதாவுக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. சிறு அறுவை சிகிச்சை சற்று முன் முடிந்தது. 

முதல்வரின் உடலில் ஏற்படும் எதிர்வினையைப்பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதயநாளத்தில் உள்ள அடைப்பை அறுவை சிகிச்சையின்றி சரிசெய்யக்கூடியது ஆஞ்ஜியோ ஆகும்.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்ட சற்று நேரத்தில், அனைத்து ஊடகங்களிலும் வெளியானதால், தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனை முன் திரண்டுள்ளனர்.

தமிழக முதல்வருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட செய்தி அறிந்ததும் தமிழக கவர்னராக பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னை புறப்பட்டு வந்தடைந்தார். நேற்று இரவு 11.30 மணிக்கு சென்னை வந்த அவர், அப்பல்லோ மருத்துவமனைக்கு சரியாக இரவு 12 மணிக்கு  சென்றார்.

அங்கு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடமும், சிறப்பு டாக்டர்களையும் கலந்து ஆலோசித்து, முதல்வரின் உடல்நிலை குறித்த தகவல்களை கேட்டறிந்தார். அங்கு 10 நிமிடம் மட்டுமே இருந்த வித்தியாசாகர் ராவ், அங்கிருந்து மீண்டும் கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்ஜியோ கிராம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக மக்கள் பலரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆளுநர் வித்யாசாகர் ராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதும் இல்லை என்று தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்கம் அளித்ததாக தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios