#IndiaTogether எங்க பிரச்னையை எங்களுக்கு தீர்த்துக்க தெரியும்..! அந்நிய சக்திகள் அடங்குங்க - லதா மங்கேஷ்கர்
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடத்தப்பட்டு வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து வெளிநாட்டவர்கள் கருத்து தெரிவித்துவரும் நிலையில், இந்திய உள்விவகாரங்களில் அந்நிய சக்திகள் தலையிட வேண்டாம் என்று லதா மங்கேஷ்கர் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவர முனையும் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் விவசாயிகள் 2 மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியும், அப்போது வெடித்த வன்முறையும், சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது.
விவசாயிகள் போராட்டம் குறித்து சர்வதேச அளவில் பிரபலங்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். வெளிநாட்டை சேர்ந்த பிரபல பாடகியும், கலைஞருமான ரிஹானா, ”இணையதள துண்டிப்பு குறித்து ஏன் யாரும் பேசவில்லை” என்று டுவீட் செய்திருந்தார். அவரது டுவீட்டுக்கு எதிராகவும் ஆதரவாகவும் இந்தியர்கள் பலர் டுவீட் செய்திருந்தனர்.
அதேபோல ஸ்வீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் க்ரெட்டா துன்பெர்க்கும், விவசாயிகள் போராட்டம் குறித்து, இந்திய விவசாயிகள் போராட்டத்தில் நாங்களும் துணை நிற்கிறோம் என்று பதிவிட்டிருந்தார். இதேபோல் வெளிநாட்டை சேர்ந்த பல பிரபலங்கள், விவசாயிகள் போராட்டம் குறித்து போட்ட டுவீட்டுகள், சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த நிலையில், இந்திய உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று அவர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தியிருந்த நிலையில், அதே கருத்தை லதா மங்கேஷ்கரும் வலியுறுத்தியுள்ளார்.
#IndiaTogether மற்றும் #IndiaAgainstPropaganda என்ற ஹேஷ்டேக்குகளுடன் இந்திய பிரபலங்கள் டுவீட் செய்துவருகின்றனர்.
அந்தவகையில், இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியான லதா மங்கேஷ்கர், “இந்தியா போற்றத்தக்க மதிப்புமிகு நாடு. இந்தியாவில் என்ன பிரச்னையாக இருந்தாலும், அதை நாங்களே பார்த்துக்கொள்வோம். இதை ஒரு பெருமைமிகு இந்தியனாக என்னால் கூறமுடியும். எந்த பிரச்னைக்கும் இணக்கமான முறையில் தீர்வு காணும் தகுதி இந்தியாவிற்கு உள்ளது” என்று லதா மங்கேஷ்கர் தெரிவித்துள்ளார்.