மேற்கு வங்கத்தில் உள்ள சிக்னல்கள், அரசு மற்றும் பொது இடங்களில் அடுத்த 15 நாட்களுக்கு லதா மங்கேஷ்கரின் பாடல்களை இசைக்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். 

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. 20 நாட்களுக்கும் மேலாக கொரோனா தொற்றுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை அடுத்தடுத்த பல உறுப்புகளும் செயலிழக்க 8.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

லதா மங்கேஷ்கர் மறைவை ஒட்டி இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.பிரதமர் தனது டிவிட்டரில் "அருமையான மற்றும் அக்கறையுள்ள லதா தீதி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அவர் நம் தேசத்தில் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டுச் செல்கிறார். வரும் தலைமுறையினர் அவரை இந்திய கலாச்சாரத்தின் தலைசிறந்த வீரராக நினைவு கூர்வார்கள், அவரது தேன் போன்ற இனிமையான குரல் மக்களை மயக்கும் இணையற்ற திறனைக் கொண்டுள்ளது" என்று அவர் பதிவிட்டுள்ளார் .மும்பையில் நடக்கும் லதா மங்கேஷ்கரின் அரசு முழு மரியாதையுடன் நடைபெறும் இறுதிச் சடங்கில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். 

திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தனது இரங்கல் பதிவில், 'உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களைப் போல, நானும் அவரது பல பாடல்களை உருகி கேட்டிருக்கிறேன். இசை உலகின் பிரமாண்டமாக லதா மங்கேஷ்கர் இருந்தார். அவரது மறைவால் வாடும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.' என்று கூறியுள்ளார். மேலும் அவர் வங்காளத்தையும் கிழக்கின் கலைஞர்களையும் தனது இதயத்திற்கு மிகவும் அன்பாக வைத்திருந்ததற்கு நன்றியுள்ளவனாக உணர்ந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மேற்கு வங்கத்தில் நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் பொது இடங்களில் அடுத்த 15 நாட்களுக்கு லதா மங்கேஷ்கரின் பாடல்களை இசைக்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.