முடிந்தது பட்ஜெட் கூட்டத் தொடர்... தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து தேதி குறிப்பிடாமல் மக்களவை, மாநிலங்களை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31-ந்தேதி தொடங்கி, பிப்ரவரி 9-ந் தேதி முடிந்தது. அதன்பின் 2-வது அமர்வு மார்ச் 9-ந்ததி தொடங்கி நேற்று வரை நடந்தது.
மாநிலங்கள் அவையைப் பொருத்தவரை, இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வரலாற்றுசிறப்பு மிகுந்த ஜி.எஸ்.டி. மசோதா, எதிரி சொத்து மசோதா உள்ளிட்ட 14 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவு நாளான நேற்று மாநிலங்கள் அவையின் தலைவர் ஹமீது அன்சாரி பேசுகையில், “ இந்த கூட்டத்தொடரில் 14 மசோதாக்களை அவை நிறைவேற்றி இருக்கிறது. 2017-18ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் ,ரெயில்வே பட்ஜெட், ஜி.எஸ்.டி. மசோதா ஆகியவை குறித்து நீண்ட விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன. கேள்விநேரத்துக்கு பிந்திய நேரத்தில் 205 கேள்விகள், 76 சிறப்பு கவனஈர்ப்புகள், 4629 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. 33 தனிநபர் மசோதாக்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.
அவையில் பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, காங்கிரஸ் மூத்த எம்.பி. குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் அவையில் இருந்தனர்.
மக்களவை
மக்களையில் நிறைவு நாளான நேற்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேசுகையில், “ இரு அவைகளும் 29 அமர்வுகளாக, 176 மணிநேரம் 39 நிமிடங்கள் நடத்தப்பட்டுள்ளன. அமளி, கூச்சல் காரணமாக அவையின் செயல்பாடுகள் 8 மணிநேரம் 12 நிமிடங்கள் பாதிக்கப்பட்டன.
ஜி.எஸ்.டி. மசோதா, எதிரிசொத்து மசோதா, மனநிலம் பாதிக்கப்பட்டவர் மசோதா, மோட்டார் வாகனச் சட்டதிருத்த மசோதா, மகப்பேறு நலன் திருத்த மசோதா, எயிட்ஸ் தடுப்பு மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேறின.
560 கேள்விகளுக்கு 136க்கு மேல் வாய்மொழியாக பதில் அளிக்கப்பட்டது. அதாவது நாள்ஒன்றுக்கு 4.68 கேள்விகள் எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டன. விதி 377ன்கீழ் 494 விஷயங்கள் எடுத்துக்கொண்டு விவாதிக்கப்பட்டது. தனிநபர்கள் 158 மசோதாக்களை அறிமுகம் செய்தனர். பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்தது, பொது பட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட்டை இணைத்தது வரலாற்று சிறப்பு மிக்க செயல்’’ எனத் தெரிவித்தார்.
மக்களவையில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜ் வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.