விமானத்தில் ‘லேப்-டாப்’ ‘டேப்ளட்’ எடுத்துச் செல்ல வருகிறது தடை..?
விமானப் பயணத்தின் போது, மிகப்பெரிய மின்னணு சாதனங்களான லேப்-டாப்’, டேப்ளட் உள்ளிட்ட பொருட்களை உடன் எடுத்துச் செல்ல விரைவில் இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் தடை விதிக்கலாம் எனத் தெரிகிறது.
லேப்-டாப்களில் உள்ள பேட்டரிகள் மூலம் விமானப்பயணத்தின் போது தீ விபத்து ஏற்பட சாத்தியம் இருப்பதால், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தடை விதிக்கப்படலாம்.
மேலும், லேப்-டாப் போன்ற மின்னணு பொருட்களில் திடீரென தீ பிடித்தால், அல்லது பேட்டரி வெடித்தால் அதை எப்படி கையாள்வது, அனைப்பது குறித்து விமான பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில், டெல்லியில் இருந்து இந்தூர் சென்ற விமானத்தில் ஒரு பயணி வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து தீ பிடித்தது. இதையடுத்து, உடனடியாக விமான பணியாளர்கள் தீயணைக்கும் கருவி கொண்டு அணைத்து பெரிய விபத்து ஏதும் நடக்காமல் காத்தனர்.
ஆதலால், வரும் காலத்தில் பெரிய அளவிலான மின்னணு பொருட்களை பயணிகள் உடன் எடுத்துவருவதற்கு தடை விதிக்க விமான போக்குவரத்து துறை ஆலோசித்து வருகிறது.
இது குறித்து விமானப் போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ மேலும் சர்வதேச அளவிலான விமான நிறுவனங்களும் பயணிகள் தங்களுடன் லேப்-டாப் போன்ற பெரிய மின்னணு சாதனங்களை கொண்டு வர தடை விதிக்க ஆலோசித்து வருகின்றன. ஒருவேளை சர்வதேச விமான நிறுவனங்கள் தடை விதிக்கும் பட்சத்தில், அதைப் பின்பற்றி இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகமும் தடை விதிக்க வேண்டியது வரும் . பவர்பேங்க், மொபைல் சார்ஜர், இ-சிகரெட்ஆகியவை எடுத்துவர ஏற்கனவே தடை நடப்பில் இருக்கிறது’’ எனத் தெரிவித்தார்.
மேலும், சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின்(ஐ.சி.ஏ.ஓ.) ஆபத்தான பொருட்கள் குறித்து ஆய்வு செய்யும் குழுவும், பயணிகள் கொண்டுவரும் பெரிய அளவிலான மின்னணு சாதனங்களை பாதுகாப்பு கருதி தடை செய்யலாமா என ஆய்வு செய்து வருகிறது. இது தொடர்பாக அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகமும், பெரிய மின்னணு சாதனங்களை தங்களின் சரக்கு விமானத்தில் கொண்டு செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து தங்களின் அறிக்கையையும் ஐ.சி.ஏ.ஓ அமைப்புக்கு அனுப்பி இருக்கிறது. அதில், மின்னணு சாதனங்களை சரக்கு விமானத்தில் கொண்டு செல்லும் போது,சில நேரங்களில் விமானத்தை இழக்கும் நிலை ஏற்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை விமான பயணத்தில் பயணிகள் தங்களுடன் டேப்லெட், லேப்-டாப், செல்போன் போன்றவற்றை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. சர்வதேச நிறுவனங்கள்
தடை விதிக்கும் பட்சத்தில் மத்திய விமானப்போக்குவரத்து துறை இந்த பொருட்களுக்கும் தடை விதிக்கலாம்.