சர்ச்சையைக் கிளப்பும் லாலு பிரசாத் இல்லத்திருமணம்...! சிவன்-பார்வதி வடிவில் மணமக்கள் போஸ்டர்...!
பீகாரின் முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவின் மூத்த மகன் திருமணம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைக்கு முக்கிய காரணம் மணமகன் - மணமகள், சிவன் - பார்வதியாக உருவகப்படுத்தி போஸ்டர் அடிக்கப்பட்டுள்ளதே.
பீகாரின் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாபின் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னாள் முதலமைச்சரின் வீட்டு விசேஷம் என்பதால், வெகு கோலாகலமாக தேஜ் பிரதாபின் திருமணம் கொண்டாடப்பட்டது. பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமண விழாவில் சில சர்ச்சைகளும் ஏறபட்டுள்ளன.
பாட்னா கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த திருமணத்தில் கலந்து கொள்ள லாலு பிரசாத், பரோலில் வெளியே வந்துள்ளார். இந்த விழாவில் முதலமைச்சர் நிதீஷ்குமார் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமண மண்டபத்தில் கட்சியினர், உறவினர்கள் என ஆயிரக்கணக்கானோ கூடினர். அப்போது விருந்து நிகழ்ச்சிக்காக விஐபி பந்த போடப்பட்டிருந்த பகுதியிலும் கூட்டிம் கூடியது. விருந்தில் கலந்து கொள்ள முடியாத சிலர் ஆத்திரத்தில் டேபிள், சேர்களை அடித்து நொறுக்கி ரகளை செய்தனர். இன்னும் சிலர் பரிமாற வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களை எடுத்துச்சென்ற சம்பவமும் நடந்தது.
இதையெல்லாம் தாண்டி மணமகன் தேஜ் பிரதாப் சிங்கை சிவனாகவும், மணமகள் ஐஸ்வர்யா ராயை பார்வதியாகவும் உருவகப்படுத்தி போஸ்டர் அடிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியினர், இந்த போஸ்டரைக் கொண்டாடத்தான் செய்தனர்.
இந்த போஸ்டர் குறித்து சமூக வலைத்தளங்களில் மக்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஊழல் வழக்கில் தண்டனைப் பெற்றுள்ள லாலுவை சுட்டிக்காட்டியும், ஊழல் வழக்கில் சிக்கியவரின் குடும்பத்தினரை இப்படி கடவுளரைப் போல் சித்தரிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று விமர்சனம் முன் வைக்கப்படு வருகின்றன.