இது தீட்சித்தின் நாடு... மற்ற நாடுகள் சொந்தம் கொண்டாடாத இடத்தைப் பிடித்த இந்தியர்... தானே மன்னர் என்று முடிசூட்டிக் கொண்ட விநோதம்!
எகிப்து - சூடான் நாடுகளுக்கு இடையே, 800 சதுர மைல் இடத்துக்கு தன்னை அரசனாக அறிவித்துக் கொண்டுள்ளார் இந்தியர் ஒருவர்!
இந்தியாவின் இந்தூர் நகரைச் சேர்ந்தவர் தீட்சித் என்ற இளைஞர். இவர், எகிப்து மற்றும் சூடானுக்கு இடையில் இருக்கும் இடத்தைத் தனது நாடு என்று கூறிக் கொண்டுள்ளார். மேலும், இந்த நாட்டுக்கு நானே அரசன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எகிப்து மற்றும் சூடானுக்கு இடையில் வறண்ட பாலைவனப் பகுதியான பிர் டவில் பகுதி உள்ளது. இது, 800 சதுர மைல் அளவில் பரந்துள்ளது. இந்தப் பகுதிக்கு எகிப்து, சூடான் நாடுகள் ஆகிய அண்டை நாடுகள் எதுவும் சொந்தம் கொண்டாடவில்லை.
இந்தப் பகுதியில் மனிதர்கள் எவரும் வாழவும் இல்லை. ஆள் அரவமற்ற இந்தப் பகுதியை இந்திய இளைஞர் ஒருவர் பிடித்துக் கொண்டு, இந்தப் பகுதி ஒரு தனி நாடு என்றும், இதனைத் தனது நாடு என்றும் அறிவித்துக் கொண்டுள்ளார்.
தனது அறிவிப்பு குறித்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார் தீட்சித்.. அதில், “நான் சுயாஷ் திட்சித். இந்தோரில் இருந்து வந்திருக்கிறேன். எனது பெயரின் அடிப்படையில் இந்தப் பகுதிக்கு, ’கிங்டம் ஆஃப் தீட்சித்’ என்று பெயரிட்டுள்ளேன். யாருமே சொந்தம் கொண்டாடாத பிர் டாவில் பகுதியை என் நாடாக அறிவிக்கிறேன். நான் என்னை இந்த நாட்டின் முதல் அரசனாக இந்த உலகுக்கு அறிவிக்கின்றேன்” என்று கூறியுள்ளார்.
அவர் இந்தப் பகுதியை தீட்சித்தின் நாடு என்று பெயர் சூட்டிக் கொண்ட பின்னர், தனது தந்தையை பிரதமராகவும், அதிபராகவும், இராணுவத் தலைவராகவும் அவர் அறிவித்துக் கொண்டுள்ளார்.
இந்தப் பகுதி எகிப்தின் ராணுவ நகர்வுத் தடமாக இருந்தது. இது சர்வதேச எல்லைக்குள் இருந்தாலும், பயங்கரவாதிகள் செல்லும் போது, அவர்களை ராணுவத்தினர் சுட்டுக் கொல்ல இங்கே உரிமை இருந்தது. இருந்தாலும் இந்தப் பகுதியில் செல்லும் போது, அனுமதி தேவைதான் என்று கூறியுள்ளார் தீட்சித்.
தன்னை இந்த நாட்டின் ராஜா என்று அறிவித்துக் கொண்டதுடன், இதற்காக ஒரு இணையதளத்தையும் துவக்கி விட்டார் தீட்சித். https://kingdomofdixit.gov.best
இந்த பாலைவனப் பகுதியில் விதை ஒன்று போட்டு, அதற்கு தண்ணீர் விட்டு, இரண்டு இடங்களில் தனது கொடியையும் நட்டுள்ளார் தீட்சித். இந்த இடத்துக்குச் செல்லும் போது, தனது பயண அனுபவம் குறித்து அவர் தெரிவித்த போது, “எகிப்து ராணுவத்தின் அனுமதியுடன் இந்த பகுதிக்குச் சென்றேன். 6 மணி நேரம் பயணம் செய்து, பாலைவனத்தின் நடுப் பகுதியை அடைந்தேன். அங்கு, விதைகள் தூவி, அதற்குத் தண்ணீர் அளித்தேன். இதை எனது நாடாக அறிவித்து, என்னை முதல் அரசனாகவும் இந்த உலகிற்கு அறிவித்துக் கொண்டேன்.” என்று கூறியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நாடு குறித்து தனது இணையதளத்தில் சில கட்டுப்பாடுகளையும் தகவல்களையும் கூறியுள்ளார். தனது நாட்டில் ஒருவர் மட்டும் வசிப்பதாகவும், அதன் தலைநகர் சுயாஷ்புர் என்றும், இந்த நாடு 2017 நவ. 5ம் தேதி பிறந்ததாகவும் தனது பேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.