கேரள மாநிலம், கோட்டயம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தலித் மாணவர் ராகிங் கொடுமைக்கு ஆளாகி சிறுநீரகம் பாதிக்கப்பட்ட வழக்கில் சீனியர் மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2ம் தேதி இரவு, கல்லூரியின் மாணவர் விடுதியில், நடந்த ராகிங் கொடுமையில் ஒரு மாணவருக்கு சீறுநீரகம் பாதிக்கப்பட்டது. கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் அந்த தலித் மாணவருக்கு இதுவரை 3 முறை டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சூரைச் சேர்ந்தவர் அவினாஷ். இவர் உள்பட 8 மாணவர்களையும், சீனியர் மாணவர்கள் கடந்த 2ம் தேதி இரவு நிர்வாணப்படுத்தியுள்ளனர். பின்னர் தரையில் நீச்சல் அடித்தல், குதித்தல் போன்ற கடுமையான பயிற்சிகளை செய்யுமாறு கட்டாயப்படுத்தினர். இதுபோல் சுமார் 5 மணி நேரம், அவர்களை கொடுமைப்படுத்தியுள்ளனர். அப்போது அந்த மாணவர்களில் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. ஆனாலும், அவர்களை விடவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், திருச்சூரில் உள்ள தனது வீட்டுக்கு அவினாஷ் சென்றுள்ளார். அங்கு அவரது உடல்நிலை மிகவும் பலவீனமாக இருந்ததால், மருத்துவமனையில் அவரை உடனடியாக பெற்றோர் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்தபோது, அவினாஷுக்குசிறுநீரகம் பாதிக்கப்பட்டது தெரிந்தது.
இதையடுத்து, அவினாஷுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். இதேபோல், மற்றொரு மாணவர் கொச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், மாணவர் அவினாஷை, சீனியர் மாணவர்கள் 9 பேர் சித்ரவதை செய்த தகவலை அவரது தந்தையிடம் நண்பர்கள் கடந்த 15ம் தேதி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவினாஷின் தந்தை, போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், அவிநாஷ் உள்பட மாணவர்களை சித்ரவதை செய்த சீனியர் மாணவர்கள் 9 பேருக்கு எதிராகவும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இதை அறிந்த சீனியர் மாணவர்கள், தலைமறைவாக இருந்தனர். இந்நிலையில், சீனியர் மாணவர்கள் 5 பேர் இன்று காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர்.
