தியேட்டர்களை ஓபன் பண்ணலாம்… மாநில அரசு திடீர் அனுமதி
கேரளாவில் தியேட்டர்களை திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் தியேட்டர்களை திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா தொற்று பரவல் மிக அதிகமாக காணப்படுகிறது. நாட்டின் ஒட்டு மொத்த கொரோனா தொற்றில் ஒரு குறிப்பிடட் அளவு தொற்று கேரளாவில் பதிவாகி வருகிறது.
இன்றைய தகவலின் அடிப்படையில் கேரளாவில் 13, 217 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. 14,437 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இன்னமும் 1,41,155 பேர் கொரோனா தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந் நிலையில் கொரோனா தொற்று குறித்த ஆய்வு கூட்டம் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கொரோனா பரவல், தடுப்பு நடவடிக்கைகள், தற்போதைய நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் தியேட்டர்கள், கல்லூரிகள் திறப்பது குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் படி வரும் 25ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. 50 சதவீதம் இருக்கைகளுடன் இயங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தியேட்டர் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தவிர கல்லூரி இறுதிஆண்டு மாணவர்களுக்காக கல்லூரிகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கிராம சபை கூட்டங்கள் நடத்தவும் அனுமதி தரப்பட்டு உள்ளது.