கேரளத்தில்‌ ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்ததையடுத்து, நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் இதுவரை 200 உணவகங்கள்‌ மூடப்பட்டுள்ளதாக தகவல்‌ வெளியாகியுள்ளது. 

அணமையில் கேரளம்‌ மாநிலம்‌ காசர்கோடு மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட 17 வயது மாணவி உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பழைய கோழி இறைச்சியால்‌ செய்யப்பட்ட ஷவர்மா சாப்பிட்டதால் மாணவில் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த கடையில் உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்த போலீசார், ஷவர்மா உணவகத்திற்கு சீல் வைத்தனர்.

அந்த ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்ட மேலும் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஆகிய அறிகுறிகள் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் கடை உரிய அனுமதி இன்றி இயங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கடை மேலாளர், ஷவர்மாவைத் தயாரித்த இருவர் மற்றும் இணை உரிமையாளர் கைது செய்யப்பட்டனர். 

பிரேத பரிசோதனை அறிக்கையில் உயிரிழந்த மாணவி தேவநந்தாவின் மரணத்திற்கு ஷிகெல்லா பாக்டீரியா தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. பொதுவாக அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவு பொருட்களில்தான் இந்த பாக்டீரியா வேகமாக பரவும் என்றும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, அம்மாநில சுகாதாரத்‌ துறை அமைச்சர்‌ வீனா ஜார்ஜ்‌ உத்தரவின்படி, உணவகங்களில் உணவுப்‌ பாதுகாப்புத்‌ துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

அதன் படி, இதுவரை 2,180-க்கும்‌ மேற்பட்ட உணவகங்களில்‌ நடத்தப்பட்ட சோதனையில்‌ 340 கிலோவுக்கும்‌ அதிகமான கெட்டுப்போன இறைச்சிகள்‌ பறிமுதல்‌ செய்யபட்டுள்ளது.மேலும்‌, கெடமால்‌ இருப்பதற்காக ரசாயனம்‌ தடவப்பட்ட 6,240 கிலோ மீன்களை பறிமுதல்‌ செய்து அழிக்கப்பட்டுள்ளது. இந்தச்‌ சோதனைகளில்‌ முறையாக பதிவு செய்யாத, உரிமம்‌ இல்லாத 201 உணவகங்கள்‌ மூடப்பட்டதாகவும்‌ தகவல்‌ வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்தது இந்த காரணத்தால்தான்.. பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்..!