Kerala schools to give free sanitary napkins to all girl students in the state
மருத்துவப் பணியை கைவிட்ட இரு பெண் டாக்டர்கள், ‘மாதவிலக்கு சுகாதாரம்’ குறித்து பள்ளிகூடங்களுக்கு சென்று மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஊட்டி வருகின்றனர். மேலும், அவர்களுக்கு தங்களின் சொந்த செலவில் இலவசமாக ‘நாப்கின்’களும் வழங்கி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம், வாரங்கலைச் சேர்ந்த நோயியல் மருத்துவர் பிரீத்தி தாயல், பெண் நோயியல் மருத்துவர் காவ்யாஆகிய இருவரும் தான் இந்த பணியை கடந்த 8 மாதங்களாகச் செய்து வருகின்றனர்.
இது குறித்து மருத்துவர் காவ்யா கூறுகையில், “ கிராமங்களில் 80 சதவீதம் பெண்கள் மாதவிலக்கு நேரத்தில் ‘நாப்கின்’களை பயன்படுத்துவதில்லை. இதனால், அதிகமான நோய் தொற்றுகளுக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக பெண்குழந்தைகள் பூப்பெய்தியபின், மாதவிலக்கு நேரத்தில் சானிட்டரி நாப்கின் கிடைக்காமல், சிலர் பள்ளிப்படிப்பையே நிறுத்தி விடுகின்றனர்.
கிராமங்களில் உள்ள பெற்றோர்கள் தங்களின் பெண்பிள்ளைகள் பூப்பெய்தியதை மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால், உளவியல்ரீதியாக தங்களின் மகள் மாற்றம் அடைந்துவிட்டதை பற்றிகவலைப்படுவதில்லை. பெண்பிள்ளைகள் குறித்த விவாதம் எழும்போதெல்லாம், சீக்கிரம் திருமணமாகிச் செல்பவள் என்று மழுப்புகிறார்கள்.
கிராமங்களில் பெண் குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. குறிப்பாக வாரங்கல் மாவட்டத்தில் உள்ளகஸ்தூரிபா காந்தி பலிகா வித்யாலயா பள்ளிகளுக்கு படிக்கும் மாணவிகளுக்கு பிராசரம் செய்து வருகிறோம். இந்த மாணவிகள் மாதவிலக்கு நேரத்தில் வகுப்புகளை புறக்கணித்து வீட்டுக்கு செல்கிறார்கள். அவர்கள் வாங்கும் அளவுக்கு ‘நாப்கின்’கள் கிடைப்பதில்லை. கிடைத்தால் அவர்கள் பயன்படுத்துவார்கள். மாணவிகளிடம் மாதவிலக்கு குறித்து விழிப்புணர்வு செய்தபின், அவர்களுக்கு இலவசமாக ‘நாப்கின்’களையும் வழங்குகிறோம். இதற்காக பெண்கள் சுய உதவிக்குழுவுடன் ஒப்பந்தம் செய்து, குறைந்தவிலையில் ‘நாப்கின்’களை கொள்முதல் செய்கிறோம். ’’ என்று தெரிவித்தார்.
கடந்த 8 மாதங்களில் மருத்துவர்கள் காவ்யா, பிரித்தி ஆகிய இருவரும் 10 அரசு பள்ளிகளுக்கு சென்று 2 ஆயிரம் மாணவிகளிடம் மாதவிலக்கு குறித்து பிரசாரம் செய்துள்ளனர். இதற்காக தங்களின் டாக்டர் பணியைத் துறந்து முழுநேரமாக இதைச் செய்து வருகின்றனர்.
