48 மணி நேர இலவச சிகிச்சை...அடுத்தடுத்து அதிரடி காட்டும் முதல்வர் பினராயி விஜயன்!
விபத்தில் சிக்குபவர்களின் உயிர் காக்க தனியார் மருத்துவமனைகளில் 48 மணி நேர இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று, கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டு இருக்கிறார்.
தமிழக வாலிபர்
தமிழ்நாட்டில் நெல்லையைச் சேர்ந்த முருகன் என்ற வாலிபர் கேரளாவில் நடந்த விபத்தில் சிக்கி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றபோது அவரை சிகிச்சைக்கு அனுமதிக்காமல் அலைக்கழித்ததால் உயிர் இழந்தார்.
இதுபோல கேரளாவில் விபத்தில் சிக்கிய மேலும் சிலர் உடனடி சிகிச்சை கிடைக்காததால் உயிர் இழந்த சம்பவங்களும் நடந்தது.
பினராயி விஜயன் ஆலோசனை
இந்த சம்பவங்கள் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சில ஆஸ்பத்திரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் விபத்துகளில் சிக்குபவர்களின் உயிரை காக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் மருத்துவத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
48 மணி நேரத்திற்கு...
அப்போது விபத்தில் சிக்குபவர்களை அருகில் உள்ள தனியார், அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்ததால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். அவர், ஏழையா, பணக்காரரா? என்று பார்க்காமல் 48 மணி நேரத்திற்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டார்.
முதலில் அதற்குரிய கட்டணத்தை அரசு செலுத்தும். அதன் பிறகு அந்த பணம் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.