கேரளாவில் துப்பாக்கி சண்டை !! சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் !!
கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் அதிரடிப் படையினருக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வைத்திரி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நேற்று இரவு மாவோயிஸ்டுகள் புகுந்துள்ளனர். அங்கிருந்தவர்களை சிறைப்பிடித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு விரைந்த மாநில அதிரடிப்படை போலீசார், மாவோயிஸ்டுகள் இருந்த ரிசார்ட்டை சுற்றி வளைத்து மாவோயிஸ்டுகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். மாவோயிஸ்டுகளும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தினர்.
சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டான். காயமடைந்த மற்றொரு மாவோயிஸ்ட் அங்கிருந்து காட்டிற்குள் தப்பிச் சென்றுவிட்டதாக தெரிகிறது. அவனை அதிரடிப்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
காயமடைந்த மாவோயிஸ்டுகள் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு வர வாய்ப்புள்ளதால் தமிழக - கேரள எல்லையில் உள்ள மருத்துவமனைகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.